Wednesday, March 31, 2010

”எந்திரன்” - ஒரு எலெக்ட்ரிக் சந்திப்பு

அலுவலக மீட்டிங்கில் தலை தகித்து கொண்டிருந்த வேளையில், ஒரு நெருங்கிய நண்பரிடம் இருந்து ஃபோன்.... அவசர மீட்டிங்கில் இருந்ததால் எடுக்க முடியவில்லை... மறுபடி மறுபடி நண்பர் முயற்சிக்கவே... மேட்டர் அர்ஜெண்ட் என புரிந்தது.

கிடைத்த இடைவேளையில் நாங்கள் நண்பரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் சொன்ன செய்தி, கோடான கோடி மக்களின் ஆதர்சன நாயகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “பேரை கேட்டதுமே சும்மா அதிருதில்ல” .... அந்த மாபெரும் நாயகனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பற்றிய தொலைபேசி அழைப்பு அது... உடனே சுறுசுறுப்பானோம்...

தென் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சந்திக்க சூப்பர் ஸ்டார் இசைந்திருப்பதாகவும், நாம் விரும்பினால் இணையலாம் என்றது அந்த செய்தி... மகிழ்ச்சிதான் என்றாலும் எல்லோருடன் இணைந்து சூப்பர் ஸ்டாரை சந்தித்தால், பெரிய அளவில் பேசும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்பதால், ஒரு தனி சந்திப்புக்கு ஏங்குவதாய் சொன்னோம்... பிறகு கூப்பிடுவதாக சொல்லி இணைப்பை துண்டித்தார்...

ஒரு வார இடைவெளியில் மீண்டும் நண்பர் அழைத்தார்... சூப்பர் ஸ்டாரின் உதவியாளரிடம் பேசி விட்டதாகவும், எங்களுக்காக 30 நிமிடம் ஒதுக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்... அந்த இனிய நாளை எதிர்பார்த்து காத்திருந்தோம்... அந்த நல்ல நாளும் வந்தது...

கார் இருந்தாலும், அதில் போய் இறங்கி பந்தா காட்ட விரும்பாததாலும், பார்க்கிங் பற்றிய பயம் வந்ததாலும், ஒரே ஒரு ஆட்டோ பிடித்து, குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி முன்னதாகவே ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை அடைந்தோம்... என்ன பேசுவது, எப்படி பேசுவது என விவாதம் விருட்சமாய் விரிந்தது. எந்தெந்த படங்கள் பிடிக்கும்... இப்படி எண்ணற்ற ரசிகர்களை வசீகரித்தது எப்படி?. திரையில் அவரை பார்க்கும் போதே உணர்ச்சி வசப்படுவோமே, எழுந்து நின்று, விசில் அடித்தும், கை தட்டியும் மகிழ்வோமே, இன்று இந்த முதல் நேரடி சந்திப்பை எப்படி எதிர்கொள்வோம் என பல எண்ணங்கள்.

உதவியாளர்... கல்யாண மண்டபத்தின் வாசலுக்கே வந்து எங்களை கைப்பிடித்து வரவேற்று அழைத்து சென்றார் ஒரு அறையில் அமர செய்து விட்டு, காஃபி தருவதற்கு ஏற்பாடு செய்தார்... அறையெங்கும் ஊதுவத்தி நறுமணம் ஸ்பீக்கர்களில் மெலிதாய் வழிந்த “ஓம்” என மிக ரம்மியமான் சூழல்......

சட்டென்று அந்த சூழல் பரபரப்பாக மாறியது... எங்களுக்குள் பல வண்ண பட்டாம்பூச்சிகள் பறந்து வந்து “தலைவர்” வந்து கொண்டிருக்கிறார் என்று சேதி சொல்லி விட்டு சென்றது... அதோ... மண்டபத்தின் உள் அறையிலிருந்து “கருப்பு சூரியன்” வெளிவந்தது... அந்த இடமே ஜோதி கிளம்பி ஒளி பிரவாகமாயிற்று. அந்த தருணத்தை விவரிக்க வார்த்தையே இல்லை... எளிமையான ஒரு கதர் சட்டை, கதர் வேட்டி (கோடானுகோடி பேர் எதிர்பார்க்கும் அதே கெட்டப்தான்!!!) சீவிய சீப்புக்கு டிமிக்கி கொடுத்த சற்றே கலைந்த நிலையில் பரட்டை தலை, கூரிய பார்வை, முகமெங்கும் ஒரு அட்டகாச சிரிப்பு, நெருங்கி வந்து வாஞ்சையாய் கை பிடித்து, வணக்கம் சொன்னார்... சூப்பர் ஸ்டார்...

அவரது வேகம் தந்த பிரமிப்பில் இருந்து முழுவதுமாக மீளவில்லை... எத்தனை கோடி பேர்களை அகிலமெங்கும் தன் வசிய நடிப்பால் கட்டிப்போட்ட இந்த மனிதர் எப்படி இவ்வளவு சிம்பிளாக இருக்கிறார் என்று!!! அந்த நிமிடத்தில் பேச்சே வரவில்லை...

எங்களின் உள்ளத்தை அப்படியே படித்த அவர், என்னங்க... பார்க்கணும், பேசணும்னு வந்துட்டு... அப்படியே சைலண்டா இருக்கீங்க, பேசறதுக்கு ஒண்ணுமே இல்லையா ஹா..ஹா..ஹா.. என்று அவரின் அக்மார்க் சிரிப்பை உதிர்த்தார்..

அப்படி எல்லாம் இல்ல தலைவா... நீங்க, ஷேவ் பண்ணாம, தாடி எல்லாம் வச்சு இருப்பீங்க.. அத பார்த்துட்டு, “என்ன தலைவா...லீவுல வந்த ரிஷி மாதிரி இருக்கீங்க”ன்னு சொல்லணும்னு நெனச்சுட்டே வந்தோம்... .. ஆனால், இப்போ நீங்க பளபளன்னு இருக்கீங்களா, அதான் என்ன சொல்றதுன்னே தெரியல என்றோம்.. .. மீண்டும் அவர் பாணி வெடி சிரிப்பு.....

என்னோட பஞ்ச் டயலாக் எடுத்து என் கிட்டயே விட பாத்தீங்களா என்று சொல்லி விட்டு உதவியாளரை அழைத்து குடிப்பதற்கு ஜில்லென்று மோர் தருமாறு கூறினார்...

சொல்லுங்க... உங்க பேர் என்ன... என்ன வேலை செய்யறீங்க... குடும்பம் பற்றி சொல்லுங்க என்று கனிவுடன் கேட்க நல்ல நட்புக்குறிய பாவனையில் தகவல் பறிமாறப்பட்ட்து.... கஷ்டப்படுறவுங்களுக்கு ஹெல்ப் பண்ணனும், அது பொருள் உதவி மட்டுமல்ல... ரத்த தானமாக இருக்கலாம், தெரிந்த நண்பர்களின் கம்பெனிகளில் ஒரு வேலையாக இருக்கலாம்...நாம் செய்யும் எந்த ஒரு செயலும், உதவியும், இந்த சமுதாயத்திற்கும், ஏழை எளியவர்களின் குடும்பங்களுக்கும் செய்யும் நல்ல விஷயமாக இருக்க வேண்டும் என சமூக பொறுப்புணர்ச்சியுடன் பேசினார்.

அவர் கூறிய அந்த விஷயங்களை ஏற்கனவே நடைமுறையில் வைத்துள்ளோம் என்று விளக்கி சொன்ன போது, பரவசமாகி வெரி குட்... இத தான் நான் எல்லா ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன்...

ஏன்னா..., எப்போதும் அடுத்தவர் வந்து உதவி செய்வார், வாய்ப்பு வீடு தேடி வரட்டும் என்று காத்திருக்காமல், சுற்று புறங்களில் இருந்தும், நண்பர்கள் மூலமும் வரும் வாய்ப்பை சட்டென்று பிடித்து கொண்டு முன்னேறுவது தான் புத்திசாலிதனம் என தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தினார்...

பின்..., நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு, சரி என்று நினைத்து அவரிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்று அனுமதி வேண்டினோம்...
அதற்கு ஓ...ஷ்யூர்... உங்க கேள்விங்க என்ன... சொல்லுங்க... என்றார்...

திரையுலகில் தாங்கள் அடைந்த பெரிய வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள், இந்த சாதனை தொடர்பாய் எங்கள் முதல் கேள்வி, எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல், உங்களை மாதிரி ஒருவர் இந்த காலத்தில் முன்னேற என்னென்ன செய்ய வேண்டும்... கண் மூடி கேள்வியை உள்வாங்கி சட்டென்று சொன்னார்...

இந்த காலம்னு இல்ல... இந்த சினிமா இண்டஸ்ட்ரி தான்னு இல்ல... எந்த வேலைன்னாலும், எடுத்துட்ட வேலைல உங்களோட சின்சியர் அண்ட் டெடிகேட்டட் அப்ரோச் இருந்தா, அப்படி இருக்கற எல்லாருமே பெரிய அளவில சாதிக்க முடியும். அதிரடியாய் பதில் வருகிறது.

இந்த சாதனைகளின் அடுத்த படி என்ன, எதிர்கால திட்டம் என்ன, இதப்பத்தி கேட்டா ஏன் எப்போவும் வானத்த கை காட்டறீங்கன்னு கேட்டோம்... அதற்கு அவர்.... ஹா... ஹா...ஹா... என்று சிரித்த படி, எல்லாரும் கேக்கறது போதாதுன்னு இப்போ நீங்களுமா என்றவாறே...

இன்னிக்கு அரசியல் சூழல் நல்லால்ல... நாட்டுல பிரச்சனைங்க ஜாஸ்தி... தீவிரவாதம் மக்களை பயமுறுத்துது... மக்கள் சேவைங்கற ஒரு விஷயத்த சுத்தமா மறந்துட்டு எல்லாரும் அரசியல் பண்றாங்க... இந்த நிலையில நான் எதுவும் முடிவு எடுக்க முடியல... எனது திரைப் பிரவேசம் கூட இறை அருள்தான், அதான், எதிர்காலம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு இறைவனை கை காட்டறேன்... என்றார்...

எப்படி ஒவ்வொரு படத்திற்கு இந்தளவு எதிர்பார்ப்பு ஏற்றி விடுகிறீர்கள் என்றதற்கு, தாம் எதுவும் திட்டமிட்டு செய்வதில்லை, எல்லாம் அந்த ஆண்டவன் செயல் என்று வானத்தை காட்டினார்...

பின், டிஃபன் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... பொங்கல், வடை, இட்லி, பல்வேறு விதமான சட்னி மற்றும் சாம்பார் என்று அசத்தல் டிஃபன் எங்களுக்கு பரிமாறப்பட்ட போது... சூப்பர் ஸ்டார் கையால் ஒரு கூடுதல் வடை பெறும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது... அவர் வெறும் வேக வைத்த காய்கறிகள் ஒரு கப் மட்டுமே சாப்பிட்டார்.. கூடவே ஒரு கிளாஸ் மோர்....

பேச்சு அவரின் மாபெரும் படமான “எந்திரன்” பற்றி திரும்பியது... ”எந்திரன்” படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் பற்றி குறிப்பிடும் போது... ஷீ ஈஸ் ய வெரி வெரி டேலண்டட் ஆக்ட்ரஸ்.... எல்லாரும் அவங்களோட அழகு மட்டும் பாக்கறாங்க... நாங்க இந்த படத்துல அவங்களோட நடிப்பை பார்த்தோம், க்ரேட் பெர்ஃபாமன்ஸ் என்றார்...

முந்தைய “சிவாஜி த பாஸ்” படத்தை பற்றிய சில விஷயங்களை சிலாகித்து சொன்னார்... அந்த பட ஷூட்டிங்கின் போது, தனக்கும் டைரக்டர் ஷங்கருக்கும் இடையே இருந்த நட்பு மிக நெருக்கமானதை நினைவு கூர்ந்தார்... எழுத்தாளர், வசனகர்த்தா சுஜாதா அவர்களின் எளிமை, மொழி ஆளுமை, திறமை பற்றியெல்லாம் பாராட்டி பேசினார்...

“எந்திரன்” படத்தின் வெற்றி வாய்ப்பு, அது செய்யப்போகும சாதனைகள் பற்றி கேட்டதற்கு ....” நான் நடிக்கற படத்தின் வெற்றியை பற்றி நீங்க தான் பேசணும், நான் எதுவும் பெருமையாக பேசக்கூடாது” என்று சொல்லி சிரித்தார்... ஆனால், எந்திரன் படத்தில் ஷங்கர் மற்றும் பல நூறு பேரின் கடுமையான உழைப்பு தெரியும் என்று கூறினார்...

நாம் அந்த படத்தை பற்றி கேட்கும் முன்னமே, நாம் யாரும் இதுவரை கேள்விப்படாத, ஏன் அது பற்றி யூகிக்க கூட முடியாத ஒரு விஷயம் நடந்தது.....

பக்கத்திலிருந்த பீரோவில் இருந்து எடுத்து ஒரு ஆல்பம் தந்தார்... அது “எந்திரன்” ஆல்பம்... பார்த்தோம்... புகைப்படங்கள் எல்லாம் அசத்தல் ரகம்... தலைவரும், ஐசும் தூள் கிளப்புகிறார்கள்... அதிலிருந்த ஒரு புகைப்படத்தை பார்த்த நாம் திகைப்பின் உச்சிக்கே போனோம்... சட்டென்று இருக்கை விட்டு எழுந்தோம்...

அதை பார்த்து சிரித்தவாறே... படம் பார்க்கும் மக்களும் இந்த விஷயம் பார்க்கும் போது, இப்படி தான் பரபரப்பா தியேட்டர்ல எழுந்திருப்பாங்கன்னு சொன்னார்... ப்ளீஸ்... இந்த விஷயம்.... கொஞ்சம் பேருக்கு தான் தெரியும்... யார்கிட்டயும் சொல்லிடாதீங்க... அப்புறம் படத்த பத்தின சஸ்பென்ஸ் போயிடும் என்றார்... இசைந்தோம்... இதுவரை யாரிடமும் சொல்லவில்லை... ஏன் இந்த பதிவை படிக்கும், உங்களிடம் கூட....

இதுவரை ட்யூன் செய்யப்பட்ட 5 பாடல்களை இசைத்து காட்டினார்... அத்தனையும் சார்ட் பஸ்டர்ஸ் என்று அப்போதே கன்ஃபர்ம் ஆனது... அந்த 5 பாடல்களையும் இப்போது கூட முணுமுணுத்து கொண்டே தான் இந்த பதிவை எழுதுகிறோம்... அவரின் அடுத்த படம் பற்றிய பேச்சு எழுந்த போது, தன் கவனம் முழுதும் இப்போது “எந்திரன்” தான்... அடுத்து “சுல்தான் தி வாரியர்”... இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுக்கு பிறகு தான் எதுவும் பேச முடியும் என்று சொன்னார்...

எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிவடையும் தறுவாயில், கிளம்ப மனமின்றி சூப்பர் ஸ்டாரிடம் விடைபெற்ற போது, எங்கள் இருவர் கைகளிலும் ஒரு புத்தகம் திணிக்கப்பட்டது... (சூப்பர் ஸ்டாரின் குருநாதர் சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய ‘பொன்னான நிகழ்காலம்’ என்ற புத்தகம் என்று நினைக்கிறோம்)....அந்த புத்தக கவர் இன்னும் பிரிக்கப்படவே இல்லை என்பதை தயவு செய்து நீங்கள் வெளியில் சொல்லி விடாதீர்கள்...

எங்கள் சந்திப்பு முடிந்து மண்டபத்தில் இருந்து வெளியே வரும்போது, டைரக்டர் ஷங்கர், ரஜினி அவர்களை சந்திக்க அவசரமாக உள்ளே சென்றார்... அவரிடம் ஒரு ஃபோட்டோகிராஃப் ப்ளீஸ் என்ற போது மறுத்த அவர், அட்லீஸ்ட் ஒரு ஆட்டோகிராஃப் ப்ளீஸ்ஸ்ஸ்...... என்றவுடன், குபீரென்று சிரித்து ஓகே என்றார்... அது இதோ..














............
............
............
............
............
............
............
............
............
............
............
.............

இவ்வளவு நேரம் இந்த பதிவை பொறுமையா படிச்ச நீங்க, இது “ஏப்ரல் 1” தேதிக்கான ஸ்பெஷல் பதிவுங்கறத மறந்துட்டா படிச்சு இருப்பீங்க!!??


(அதானே... இவிய்ங்க போறாங்களாம்... சூப்பர் ஸ்டார இண்டர்வியூ எடுக்கறாய்ங்களாம்... போயி பார்த்து ஒரு ஃபோட்டோ எடுத்தோம்னு சொன்னாவே நம்ப மாட்டோம்... இதுல இண்டர்வியூன்னு சொன்னா!!?? யப்பா எம்புட்டு புளுகறாய்ங்கப்பான்னு நீங்க எல்லாரும் கோரஸாக திட்டுவது எங்க காதுல விழவே இல்லை!!!??)

இந்த ஒலகம் இன்னுமா எங்கள நம்பிட்டு இருக்கு.... அய்யோ....அய்யோ....

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

Monday, March 1, 2010

படமும் .... பதிலும்.... பின்னே பரிசும்

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி....

நற்றமிழ் கற்ற வலைக்குடி மக்களுக்கும், குடிமக்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பு....

வலையுலக வேந்தன், மெகா மொக்கை பாண்டியனுக்கு ஒரு விடயத்தில் பெருத்த சந்தேகம்... இவர் டெரர்ரா... இல்லை டெரிபிக் டெரர்ர் வேற இருக்கா...

மெகா மொக்கை பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்க்கு பரிசு....

தண்டோரா.... பரிசுத் தொகை எவ்வளவு....

அமரர் சுஜாதாவின் அசத்தலான படைப்பு ஈ-ஃபார்மட்டில் (கண்டுபிடிப்பவரின் மெயிலுக்கு) அனுப்பி வைக்கப்படும்.....

அவ்வளவும் எனக்கே எனக்கு சொக்கா என்று விடையை தருமி மாதிரி மண்டபத்தில் எழுதி வாங்கிக்கொண்டு வந்தாலும் சரி... நீங்களே கண்டுபிடித்தாலும் சரி...

இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார்... என்ன ஊர், என்ன பெயர்... என்ன செய்கிறார்... என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

ஆகவே... குடிமக்களே படத்தை பார்த்து டெர்ரர் ஆகாமல் விடை (கூடவே உங்கள் மெயில் ஐடியும்) சொல்லி பரிசை வெல்லுங்கள்.

டிஸ்கி : நெத்தி கண்ண தொறந்தாலும் குத்தம் குத்தமேன்னு சீற நக்கீரர்களும் அரசவை புலவர்களும் இங்க நிச்சயமா இல்ல, அதனால தைரியமா பதிலை சொல்லி பரிசை பெறுங்கள்.

Friday, February 26, 2010

”தல புராணம்” (ஸ்தல புராணம் என்று பக்தர்கள் ஏமாற வேண்டாம்...)

சின்ன சின்ன தல அஜித்: அய்யா... வணக்கம் அய்யா...

பெரிய தல : யாருப்பா அது... குரல் கேட்டால் அஜித் மாதிரி இருக்கு... என்ன விஷயம்...

சின்ன “தல” : அய்யா... எங்கள எல்லாம் மெரட்டுறாங்கய்யா.. நீங்க தான் பார்த்து ஏதாவது செய்யணும்....

”பெரிய தல” : யோவ் அஜித்து.. நீ ஒரு வெவரம் புரியாத ஆளுய்யா.... என்ன கூட தான் மெரட்டினாங்க... நான் உன்ன மாதிரி இவ்ளோ பெரிய கூட்டத்துலயா வந்து கத்தினேன்... வீட்டுக்குள்ளவே கத்தினேன்... போய்யா... நீயும் உன் ஐடியாவும்....

“சின்ன தல” : உங்கள் மெரட்டி, நீங்க கத்துனீங்களா?? அது எப்போய்யா... எனக்கு தெரியாதே... என்னன்னு சொல்லி கத்தினீங்க...

“பெரிய தல” : அய்யோ.... கொல பண்றாங்கோ.... கொல பண்றாங்கோ...

“சின்ன தல” : இந்த அளவு எல்லாம் நடிக்க வாய்ப்பே இல்லேங்கய்யா.... அப்படி நடிச்சு இருந்தா ..... தமிழ் நாட்டுக்கு இந்நேரம் 10 / 15 ஆஸ்கார் கெடச்சு இருக்கும்யா....

Sunday, February 21, 2010

மனைவி அமைவதெல்லாம் – (சிறுகதை)

ச்சே...... என்ன வாழ்க்கை இது...... சலிப்புடன் சொல்லியவாறு ஷூவை கழற்றி வீசினான், ஆபீசிலிருந்து திரும்பிய மோகன். ஏங்க, என்னிக்குமே இல்லாம, இன்னிக்கி ஏன் இவ்வளவு சலிப்பு என்று கேட்டாள் மனைவி வினோதினி.

இல்லேம்மா, இந்த கடவுளை நினைச்சா, ஒரு பக்கம் சந்தோஷமா இருக்கு.... இன்னொரு பக்கம், வெறுப்பா இருக்கு என்றான். சற்று நெருங்கி அமர்ந்து ’பக்திமானுக்கு, திடீர்னு கடவுள் மேல வெறுப்பு வர்றதுக்கு என்ன காரணம்? சொல்லுங்க’ என்றாள் வினோதினி. குரலில் அன்பை குழைத்து அவனை சமனமாக்கும் முயற்சியில் தொடங்கினாள்.

இல்ல வினோ, என்னோட ஆபீஸ்ல கூட வேலை செய்யற அக்கௌண்டன்ட் பரந்தாமன் சார் இருக்காரே. அவ‌ரோட பொண்ணுக்கு, ரொம்ப நாளைக்கப்புறம் இப்போதான் ஒரு நல்ல வரன் வந்து இருக்கு....பையன் நல்ல வேலையில இருக்கானாம். எங்கேயோ ஒரு கல்யாணத்துல சாரோட பெண்ணை பார்த்து இருக்கான். அவனுக்கு ரொம்ப புடிச்சு போச்சு..... பையனோட வீட்டுல, அங்க இங்க விசாரிச்சு, ஜாதகம் குடுத்து இருக்காங்க..... ஜாதகம் கூட நல்லா பொருந்தி இருக்காம்.

கல்யாணத்த சீக்கிரம் நடத்திடணும்னு பையனோட குடும்பத்துல ரொம்ப பிடிவாதமா இருக்காங்களாம். பையன் கொஞ்சம் பெரிய இடம். அதனாலே, இவரு நினைக்கறதைவிட கூட செலவு ஆகுமேன்னு பரந்தாமன் சார் வருத்தப்படறார். இன்னிக்கி வரைக்கும், யார்கிட்டயும் சொல்லாம, லன்ச் சாப்பிடறப்போ, என்கிட்டே சொல்லி கண் கலங்கினார்.

கடவுள் இருக்கார்...அதான், அவரோட பொண்ணுக்கு ஒரு நல்ல வரன் வந்ததுன்னு எடுத்துண்டா கூட... அந்த கல்யாணத்த நல்லபடியா நடத்தறதுக்கு அவர் படற கஷ்டத்த பார்த்தா, அந்த கடவுள் மேல ஒரு கோபமும், வெறுப்பும் வர்றது...

நண்பர்களை மதிப்பதிலும் அவர்கள் பிரச்சனையை தன் பிரச்சனையாய் பாவிப்பதும் தன் கணவனின் குணம் என்பதை அவள் அறிவாள். கணவன் மனைவி இருவருமே நண்பர்கள் போல தத்துவ விவாதத்தில் கலந்து, பிரச்சனையின் ஆழ செல்வர்.

நல்லது நடந்தா கடவுளை போற்றுவதும், நினைத்தது நடக்கலேன்னா அவரை தூற்றுவதும் தான் நாம எல்லாரும், எப்போவும் பண்றது தானேன்னும் தோணறது... நமக்கு மட்டும் ஏன் இந்த ரெட்டை புத்தின்னு கூட ஆச்சரியமா இருக்கு...

அவரோட இவ்வளவு வருஷ சேவிங்க்ஸ் எல்லாம் கணக்கு எடுத்தாகூட ஒரு ரெண்டு லட்சம் கொறைச்சலா இருக்காம். ரொம்ப வருத்தப்பட்டு என்கிட்டே சொன்னார். அதான், என்ன பண்றது.....அவருக்கு எப்படி உதவி செய்யறதுன்னு யோசிச்சுண்டு இருக்கேன்...கவலையுடன் நிறுத்தினான் மோகன்.....

எனக்கு சட்டுன்னு ஒண்ணுமே தோணல வினோ........ நீ ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு... நம்மளால ஏதாவது உதவி செய்ய முடியுமா? அவர் நம்ம குடும்பத்துக்கு எவ்வளவோ உதவி பண்ணி இருக்கார்....... நம்ம பொண்ணோட கல்யாணத்தப்போ கூட இதுபோல பணத்துக்கு நாம தவிச்சப்போ, அவர்தான், எங்கேயோ ஜாமீன் போட்டு ஒன்றரை லட்சம் வாங்கி கொடுத்தார்....

அட என்னங்க. அவர் பண்ணின உதவியை, நாம ஆயுசுக்கும் மறக்க முடியுமா..சரி, இப்போ பரந்தாமன் சார், வீட்டுல இருப்பாரா? கேட்டாள் வினோதினி.....மோகன் தலை நிமிர்ந்து பார்த்தான்......சொல்லுங்க, உடனே அவருக்கு ஒரு போன் போட்டு, வீட்டுலேயே இருக்க சொல்லுங்க..... நல்ல விஷயம்தான்...நான் இப்போ வரேன் என்று உள்ளே சென்றாள்.... சுவர் கடிகாரத்தில் நிமிட முள்ளை துரத்தும் வினாடி முள், ரெஃப்ரியாய் மணி முள் எனும் விளையாட்டை மும்முரமாய் விளையாடியது.

திரும்பி வரும்போது, ஒரு ஹேண்ட்பேக் வைத்து இருந்தாள்....இந்தாங்க, இதை கொஞ்சம் பிரிச்சு பாருங்க இது நம்மோட சேமிப்பு பணம் என்றாள்.... உள்ளே, கரன்சிகள் முண்டியடித்து கொண்டு இருந்தது..... மோகன் விழிகள் ஆச்சரியத்தில் விரிய......ஹேய்...நம்ம கிட்ட ஏதும்மா வினோ, இவ்ளோ பணம்.....அதுவும் சேமிப்பா!!. . எனக்கு ஆச்சரியமா இருக்கே...

இது, நான் எட்டு-பத்து வருஷமா கொஞ்சம், கொஞ்சமா சேர்த்து வச்ச பணம்... ஏதாவது வீடு வாங்கணும்னு ப்ளான் பண்ணினா, அப்போ உபயோகமா இருக்கட்டுமேன்னு கொஞ்சம், கொஞ்சமா எடுத்து வச்சது...

இல்லேன்னா.. எப்போவாவது, நமக்கோ, நம்மை தெரிஞ்சவங்களுக்கோ, ஏதாவது கஷ்டம்னு வந்தா, அன்னிக்கி இத எடுத்து உபயோகப்படுத்தணும்னு வச்சு இருந்தேன்.....இப்போதைக்கு இருக்கற வீடே போதும்னு தோணித்து... அதான், இந்த பணத்தை இதுவரைக்கும் எடுக்கவே இல்லை. அதுக்கு இப்போதான் வேளை வந்திருக்கு.. ஒரு 2-3 லட்சத்துக்கு மேலயே இருக்கும்னு நெனக்கறேன். உங்களுக்கு கூட இதை பத்தி சொல்லல..... ப்ளீஸ். என்ன மன்னிச்சுடுங்க....

அந்த கடவுள் புண்ணியத்துல, நம்ம யாருக்கும் பெரிசா ஒண்ணும் கஷ்டமோ, பெரிய அளவுல பணத்தேவையோ வரலை..... அதான், இந்த பணம் அப்படியே செலவாகாம, சேமிப்பாவே இருக்கு... என்றாள்...... இந்த பணம், இப்போ பரந்தாமன் சாரோட பொண்ணு கல்யாணத்துக்கு தான் உபயோகபடணும்...... இதை விட இந்த பணத்த உபயோகப்படுத்த நமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வராது என்று, அந்த ஹேண்ட்பேகை மோகனிடம் கொடுத்தாள் வினோதினி..

சட்டென்று சோபாவில் இருந்து எழுந்த மோகன், விநோதினியை கண்ணீர் மல்க கட்டி அணைத்து... முத்த மழை பொழிந்தான்.....வினோ.... உன்ன நெனச்சு நான் ரொம்ப பெருமை படறேன்...... அடுத்தவங்களுக்கு கஷ்டம்னு தெரிஞ்சு உதவி செய்யறவன் தான் உண்மையான மனுஷன்..... அதுவும், நமக்கு உதவி செய்தவர்க்கு ஒரு கஷ்டம்னு சொல்றப்போ, அவருக்கு உதவி பண்றதுக்கு நம்ம கையில பணம் எதுவுமே இல்லையேன்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்த போது இதை கொடுத்தியே, யூ ஆர் ரியலி க்ரேட் டியர்..இப்போ, நாம இந்த பணத்தை கொடுத்து, பரந்தாமன் சாரோட பொண்ணு கல்யாணத்துக்கு உதவி செய்யப்போறோம்.....

வள்ளுவர் சொன்ன மாதிரி "காலத்தால் செய்த உதவி சிறிதெனினும், ஞாலத்தின் மானப்பெரிது"..........அதாவது, முழுசா கல்யாண செலவுக்கான உதவி பண்ணலேன்னா கூட அவருக்கு இப்போ தேவையா இருக்கற இந்த பணம், நிஜமாவே பெரிய உதவிதான்.. உன்னோட, இந்த சேமிப்பு பழக்கத்தால ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளக்கேத்தி வைக்க போற..... அந்த கடவுள் நம்மளுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார் என்று சொல்லி, பரந்தாமன் சார் வீட்டுக்கு போன் செய்தான்......

சார், நான் மோகன் பேசறேன் ....... கவலைப்படாதீங்க சார்.. நீங்க மத்தியானம் என்கிட்ட சொன்ன, பண பிரச்சனை தீர்ந்தது....உங்க பொண்ணோட கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்க போறது.... நீங்க கேட்ட பணம் 2 லட்சம் நான் தரேன் சார்....

என்னது நன்றியா... அது ரொம்ப பெரிய வார்த்தை சார். அப்படியே நீங்க நன்றி சொல்றதுன்னாலும் என்னோட மனைவி விநோதினிக்குதான் சொல்லணும்.... எதுக்கா.... நான் இப்போ, பணத்தோட நேர்ல வரேன்... அப்போ விபரமா சொல்றேன் என்றான் மோகன்....

Sunday, February 14, 2010

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்

12.எங்கேயோ கேட்ட குரல் - 14.08.1982

மீண்டுமொரு முறை பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் அவர்கள் கூட்டணியில் வெளிவந்த கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.. ரஜினி, அம்பிகா, ராதா இணைந்து நடித்த படம்... ரஜினி அவர்களின் அமைதியான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது... அதே நாளில் பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன்., கமல் கூட்டணியில் வெளிவந்த ஒரு மசாலா படம் பட்டையை கிளப்பியது... அது “சகலகலா வல்லவன்”.

13. மூன்று முகம் – 01.10.1982

மூன்று வேடங்களில் மூன்று முகமாய் மிகவும் வித்தியாசமான நடிப்பின் பரிமாணங்களை காட்டினார். துறவறம் பூண்டு தொடங்கும் பாந்தமான காமெடி நடிப்பு, பின் பொறி பறக்கும் அலெக்ஸ் பாண்டியன் என பரிமளித்து பின் பகுதியில் ஜான் என கலக்கிய படம். இதுவே பின்னர் ஹிந்தியில் "ஜான் ஜானி ஜனார்த்தன்" எனும் பெயரில் ரீ மேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கொடி பறந்தது. குறிப்பாய் செந்தாமரைக்கும் ரஜினிக்கும் முட்டிக் கொள்ளும் காட்சிகள் தியேட்டரின் ஏகோபித்த ஆதரவு பெற்றது.

14. ஸ்ரீராகவேந்திரர் - 01.09.1985

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 100வது படம்.... திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவுடனே மனதில் முடிவு செய்து வைத்திருந்தாராம்,.. இந்த வேடத்தை 100வது படத்தில் ஏற்பது.... குருநாதர் பேனரில் நடிப்பது என்று... அதற்காகவே, கே.பாலசந்தர் அவர்கள், எஸ்.பி.முத்துராமன் அவர்களிடம் சொல்லி, இந்த படத்தை டைரக்ட் செய்ய சொன்னதான எஸ்.பி.முத்துராமன் அவர்கள் ஒரு மேடையில் கூறினார்... கவிதாலயா தயாரிப்பு... எஸ்.பி.முத்துராமன் டைரக்‌ஷன்... அருமையான இசை இளையராஜா... “அழைக்கிறான் மாதவன், ஆநிரை மேய்ப்பவன்”, ”ஆடல் கலையே தேவன் தந்தது”, தேடினேன் தேவ தேவா. தாமரை பாதமே” போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த மந்த்ராலய மகான் அவர்களின் காவியம் தமிழுக்கு கிடைத்தது...

15.படிக்காதவன் - 11.11.1985

கே.பி., எஸ்.பி.முத்துராமன் ஆகியோரை தொடர்ந்து ரஜினியின் அனைத்து பரிமாண நடிப்பை வெளிக்கொணர்ந்த மற்றொரு டைரக்டர் ராஜசேகர். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த “குத்தார்” படத்தின் தமிழ் ரீமேக்... நடிப்பின் இமயமும் நடிகர் திலகம் சிவாஜி இவரும் சேர்ந்து கலக்கி, மிகப் பெரிய வெற்றி. குடும்பத்திற்காக உழைக்கும் அப்பாவியான டாக்சி டிரைவர், தம்பி சரியாக படிக்காமல், தீய வழியில் போவதை கண்டு வெம்பும் கதாபாத்திரத்தில் பின்னி இருப்பார்.. ஜோடி அம்பிகா.. 1985 தீபாவளிக்கு வெளியானது... இருவரின் நடிப்பும் வெகு பாந்தமாக வெளிப்பட்ட படமிது.. இளையராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது...” இத்தனை அப்பாவியா என நாகேஷ் கேட்கும் காமெடிகளில் கச்சிதம். தம்பிக்கு என பாசம் கொட்டி, தன் வாழ்க்கையை அர்பணித்து விட்டு தம்பி உதாசினம் செய்து விட வெறுத்து ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் என பாடும் போது இதயம் நனையும். காமெடி யதார்த்தம் என இரு துருவங்களையும் இணைத்த பிரமிப்பு. ”ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்”, “ராஜாவுக்கு ராஜா நான்டா” “சோடிக்கிளி எங்கே சொல்லு சொல்லு” , “ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக” போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நிறைந்த படம்.

16. தளபதி - 05.11.1991

ஜி.வி.ஃபிலிம்ஸ் தயாரிப்பு...டைரக்டர் மணிரத்னம் அவர்களுடன் முதலில் இணையும் படம்.. இளையராஜாவின் அதிரடி சூப்பர் ஹிட் இசை, வாலியின் வைர வரிகளில் பட்டையை கிளப்பிய பாடல்கள்... இது “தளபதி” படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறவைத்த கூட்டணி..உயரிய இயக்கம், தேர்ந்த திரைக்கதை, குளு குளு ஒளிப்பதிவு என ரஜினியும் மம்முட்டியும் அதிரடியாய் நடித்தது. அரவிந்த்சாமி அறிமுகமான படம்..நட்பை கூட கற்பை போல் எண்ணுவேன் என கர்ணனாய் வாழும் கதாபாத்திரம்.மம்முட்டி ரஜினிக்கு இணையான படம் முழுதும் வந்து பாராட்டத்தக்க நடிப்பை தந்த படம்... ரஜினியின் பல பரிமாண நடிப்பை வெளிக்கொணர்ந்த படம்...

“ராக்கம்மா கைய தட்டு”, சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, காட்டுக்குயிலு மனசுக்குள்ள”, யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே”, ”சின்ன தாயவள் தந்த ராசாவே”, “மார்கழிதான் ஓடி போச்சு போகியாச்சு” என்று அனைத்து பாடல்களும் ஹிட் ஆன ஒரு படம் தான் “தளபதி”... 1991 ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸ்... வெற்றி பெற்ற படம்..

17.மன்னன் - 14.01.1992

பி.வாசு.இயக்கத்தில், சிவாஜி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்த படம்... ரஜினியின் அனைத்து பரிமாண நடிப்பும் வெளிப்பட்ட ஒரு படம்.. காதல், சோகம், அன்பு, பாசம், வீரம் என்று அனைத்து துறைகளிலும் ரஜினி சிக்ஸர் அடித்திருப்பார்... தாயை மதிப்பதில் மன்னன், சண்டி ராணியான மனைவி அடக்குவதில் மன்னாதி மன்னன். இளையராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது.. அதிலும் கவிஞர் வாலி எழுதி, கே.ஜே.யேசுதாஸ் பாடிய “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்... (இந்த பாடலை கல்வெட்டில் செதுக்கி வைத்துள்ளார் யேசுதாஸ் அவர்கள் தான் கட்டிய ஒரு கோயிலில்..) அம்மா என்றழைக்காத பாடலில் தன் தாயை நினைக்காத தமிழனே இல்லை என சொல்ல வைத்த பாடல். அடங்காத திமிர் பிடித்த பெண்ணாக விஜயசாந்தி ரஜினியுடன் போட்டி போட்டு நடித்து இருப்பார்... கவுண்டருடன் டிக்கிட்டு கவுண்டரில் அடிக்கும் லூட்டி எக்கச்சக்கம்.

18. அண்ணாமலை - 27.06.1992

ஆக்ரோஷமான ரஜினியை வெளிக்கொணர்ந்த, டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் செய்த படம்.. தேவாவின் பட்டையை கிளப்பிய இசை, கலகல திரைக்கதை, உணர்வு பூர்வமான நடிப்பு என சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் செம தூள்.கே.பாலசந்தர் அவர்களின் கவிதாலயா தயாரிப்பாக வந்தது..

முதலில் டைரக்டர் வசந்த் இயக்குவதாக இருந்து, சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு வந்தது..

இசையமைப்பாளர் தேவா முதன் முதலாம ரஜினி படத்திற்கு இசையமைத்த படம்... “கொண்டையில் தாழம்பூ” , “ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்”, வந்தேண்டா பால் காரன் அடடா, பசு மாட்ட பத்தி பாடப்போறேன்” (ரஜினியின் அட்டகாசமான அறிமுக பாடல்), “ஒரு பெண்புறா” போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த மாபெரும் வெற்றிப்படம்.. என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கியதில் முக்கிய பங்காற்றிய படம் என்று ரஜினியே சொன்ன படம் இது.

19.பாட்ஷா - 12.01.1995

சாந்தமான வம்புச் சண்டை எதற்கும் போகாத ஆட்டோக்காரன் என வலம் வந்து இடைவேளை வேளையில் ஆக்ரோஷமான அடிதடி ஆள் என உருமாறி அதகளப்படுத்தும் அற்புதமான நடிப்பு.

எழுத்தாளர் பாலகுமாரன் ரஜினிக்காக எழுதிய மறக்க முடியாத பஞ்ச் டயலாக் “ நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” மிடுக்காக அமைந்த படம்.

இதிலும், இசையமைப்பாளர் தேவாவின் இசை பெரிதும் பேசப்பட்டது... “ நான் ஆட்டோக்காரன்” (அட்டகாச அறிமுகப்பாடல்), “தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு”, “ அழகு, நீ நடந்தால் நடை அழகு” (இது ரஜினியின் தசாவதார பாடல்..... இந்த பாடலில் 10 அவதாரம் எடுத்து இருப்பார்), “ரா ரா ரா ராமையா” (இது சித்தர் சொல்லிய வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாக வைத்து கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல்) என்று தேவாவின் இசை ராஜாங்கம் நடந்த படம் இது...

ரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் கொடுத்து, அதன் பின்னர் போட்டுக்கோ என ஸ்வீட் பீடாவும் கொடுத்தது மாதிரி முழு திருப்தி தந்த படம். படம் மெகா ஹிட் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

20.சிவாஜி - 15.06.2007

பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இந்தியாவின் மிக மிக பிரம்மாண்டமான படம்.. இங்கிலாந்தின் பாக்ஸ் ஆஃபீஸ் யூ.கே.டாப்-10ல், 9வது இடம் பிடித்து, யூ.கே.டாப்-10 படங்களில் நுழைந்த முதல் தமிழ் படம் என்ற பெருமை பெற்றது... ஜூன் 2007ல் வெளிவந்த “சிவாஜி” செய்த சாதனை, இன்று (ஃபிப்ரவரி 2010) வரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது...... இந்திய படங்கள் என்றாலே பாலிவுட்டின் ஹிந்தி படங்கள் தான் என்று நினைத்திருந்த சர்வதேச திரைப்பட சந்தைக்கு, தமிழ் (கோலிவுட்) என்று ஒரு மார்க்கெட் உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய படம்..சர்வதேச சந்தைக்கு தமிழ் படத்தை கொண்டு சென்று, நினைத்துப் பார்க்க முடியாத வருவாயை ஈட்டி, தமிழ் படத்தை தரம் உயர்த்திய மைல்கல்.

இன்றைய தலைமுறையை ரசிக்க வைத்து அதிரடி, ஸ்டைல் என கலர்ஃபுல் கலக்கல். ரஜினி இன்னும் இவ்வளவு இளமையா, அழகா என ஆச்சர்யப்படவைத்த அற்புதம். ரஜினி-ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உலக அளவிலான வசூலில் மிக பெரிய சாதனை படைத்த படம்.... ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரிதும் பேசப்பட்ட படம்...

அவரது திரைப் பயணத்தில் மைல் கல்லாய், வெற்றியின் படிகளாய் அமைந்த டாப் 20 படங்களை பட்டியலிட்டு அதன் சிறப்பம்சங்களையும் ஒரு வரியிட்டு எழுதியது இந்த பதிவு.

மொத்தமுள்ள 150கும் மேற்பட்ட ஒரு பட்டியலில் 20ஐ மட்டும் தேர்ந்தெடுத்து தொடுப்பது, மிகவும் சிரமமாக இருந்ததே அவர் வெற்றியின் ரகசியம்.

பட்டியல் இட்டதில் விடுபட்ட பல நல்ல திரைப்படங்கள் தங்கள் மனதில் நிச்சயம் தோன்றும், அவை நிச்சயம் ரஜினியின் மணிமகுடத்தில் மின்னும் வைரங்களே.


வணக்கம்

தோழமைகள் தங்களுக்கு பிடித்த படங்களின் பட்டியலை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.