Thursday, June 18, 2009

எந்திரன் பாடல்கள் - ஏ.ஆர்.ரஹ்மான், வாலி, வைரமுத்து

பங்கேற்போர் : ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து.

ஏ.ஆர்.ரஹ்மான் : என் இருப்பிடம் தேடி வந்திருக்கும் கவிஞர்களுக்கு, இந்த இசைப்புயலின் காலை வணக்கம்.

வாலி : வாழ்க தமிழ், வளர்க தாய்த்திரு நாடு... ரஹ்மான் அவர்களே, கவிஞர்களே வணக்கம் என்று சொன்னீர்கள். இங்கு, நான் ஒரு கவிஞன் தானே உள்ளேன், பின் உங்களுக்கு ஏன் இந்த குழப்பம்.

வைரமுத்து : இசை புயலுக்கு செந்தமிழ் செல்வனின் தமிழ் வணக்கம். வடுகப்பட்டியின் சார்பாக ஒரு வீர வணக்கம். வாலி அவர்களின் இந்த நக்கல் பேச்சு, மிகவும் மிகைப்படுத்த பட்ட குத்தல் பேச்சு. நாங்களும், பலகாலமாய், தமிழை நேசித்து, சுவாசித்து, வளர்ந்தவர்கள்தான். அவ்வளவு ஏன், என் முன்னோர்களில் இருந்து இன்று, என் காலம் வரை, நாங்கள் அருந்துவது, தண்ணீர் அல்ல, தமிழ் நீர், அதுவும் தமிழ் அருவியில் இருந்து....

வாலி : சரி சரி கவிஞர், வேண்டாம் இந்த கோபம், விட்டு விடாதீர்கள் சாபம்... இந்த முத்தமிழ் வித்தகன், பைந்தமிழின் இளைய பேரன் வாலி, உங்களை கவிஞராக அங்கீகரித்து விட்டான், போதுமா?? (2-3 பாட்டுக்கு சான்ஸ் வாங்கலாம்னு பாத்தா வுட மாட்டான் போல இருக்கே?).

வைரமுத்து : கவிஞர் வாலி அவர்களே... வாழ்க உங்கள் தமிழ் பற்று...வளர்க உங்கள் தமிழ் தொண்டு....... பைந்தமிழின் இளைய பேரன் என்று உங்களை வர்ணித்த, உங்களின் நகைச்சுவை என்னை மிகவும் கவர்ந்தது... உங்களுக்கு தமிழை விட, நகைச்சுவை நன்றாக வருகிறது..... வடிவேலு பக்கத்து வீடா, இல்லை விவேக் எதிர்த்த வீடா?? பாவம், விட்டு விடுங்கள், அவர்களும் பிழைத்து போகட்டும்...

சரி, இனி விஷயத்திற்கு வருவோம்... தம்பி ரஹ்மான் அவர்கள் அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் நடிக்கும், அகில உலகையும் அதிர வைக்க போகும், மாபெரும் படமான "எந்திரன்" படத்தில் 5 அருமையான பாடல்கள் இருப்பதாக என்னிடம் மெட்டமைத்து காட்டினார். ஆஹா, அந்த மெட்டு, அத்தனையும் தேன் சொட்டு, அவை அனைத்தும் சூப்பர் ஹிட்டு.....

நான் சொல்கிறேன், இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற அந்த 5 பாடல்களை நான் எழுதுவதாக உளமார உணர்கிறேன்...... எனக்கு ஆசை அதிகம் இல்லை, அப்படியே இருந்தாலும் எல்லாம் சின்ன சின்ன ஆசைதான், அதையும் ஏற்கனவே "ரோஜா" படத்தில் சொல்லி விட்டேன். ஆகவே, அந்த 5 பாடல்களை தவிர படத்தின் மற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலியே எழுதட்டும்.......

வாலி : தம்பி வைரமுத்து அவர்களே... உங்களுக்கு தமிழ் தெரிந்த அளவு, கணக்கு தெரியவில்லை, ஏன், தமிழையே மறந்து விட்டீர்களோ என்று நினைக்கிறேன், அதனால்தான், "காதலன்" படத்தில் :

ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தால்
தேவை இல்லை பார்மசி


என்று ஒரு தமிழ் பாடலை நல்ல சுத்தமான ஆங்கிலம் கலந்து எழுதினீர்..... அனால், எனக்கு தமிழும் தெரியும், ஞான் கணக்கும் அறியும்........

வைரமுத்து : ஒன்றே சொன்னிர்கள், நன்றே சொன்னீர்கள், அதையும் இன்றே சொன்னீர்கள். பல்லில் அடிபட்டால் பல்வலி, ஒரு பாடலின் முதல்வரி பல்லவி. இதோ, படத்தின் நாயகன் அறிமுகமாகும் "எந்திரன்" படத்தின் பாடலின் பல்லவி :

எந்திரன் எந்திரன் எந்திரன்
எதிர்காலம் அறிந்த எந்திரன்
இவன் தந்திரன், தந்திரன், தந்திரன்
பூமியை ஆள வந்த இந்திரன்


வாலி : ஐயோ, ஐயோ, இது என்ன தமிழுக்கு வந்த சோதனை....... முதல் வரியில் ஏன் படத்தின் பெயர் வரவேண்டும்..... நாயகனின் பெயர் வந்தால் இன்னும் நல்லா இருக்குமே..... தம்பி ரஹ்மான் அவர்களே, வைரமுத்து சொன்னதை, மறந்து விடுங்கள்... இதோ என் பாடலை கேளுங்கள்..........

வா வா வா வசீகரா
அந்த வானமே வசப்படுமே வசீகரா
தா தா தா வசீகரா
உன் சம்மதம் தா வசீகரா ........


வைரமுத்து : கேட்டதும் வாந்தி வருவது போல் எழுத, இந்த அவனியில் உம்மை விட்டால் வேறு ஆளே இல்லை அய்யா. நீங்கள் இதுவரை இந்த வடுகப்பட்டி காரனின், தமிழை முழுமையாக கேட்டதில்லை என நினைக்கிறேன்... இதோ, ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதமாக, என் தமிழ் உங்கள் செவிகளுக்கு :

குப்பியில் இருந்து கரு மை எடுத்து,
அதில் என் தமிழை கலந்து,
நான் எழுதும் பாடல் கேட்டு,
அங்கே தமிழ் சேவல் கொக்கரிக்கும்,
தமிழ் சோடா கொப்பளிக்கும்.

என் தமிழ் ஆற்றின் சீற்றம் கண்டு,
சிறு நரிகள் சிதறி ஓடும்,
வன்புலிகள் வாலாட்டும்,
மதம் கொண்ட யானையும் மண்டி போடும்,
சீறி வரும் நாகமோ, என் தமிழ் கேட்டு
மண்ணில் மெல்ல தலை கவிழும்.

ஊசியிலை காட்டினுள் சீறி பாயும் என் தமிழ்,
அங்கே பல மூங்கில்களை துளைக்கும்.
மூங்கில் வழி நுழையும் என் தமிழ் பாட்டு,
மென் சங்கீதத்தை அங்கே சாரலாய் அள்ளி தெளிக்கும்....

நீங்காத நாதம் கேட்ட ரீங்கார வண்டுகள்,
தன் இருப்பிடம் தேடி ஓடி ஒளியும்....
துள்ளி ஓடும் புள்ளி மானும்,
மெல்ல மெல்ல மயங்கி தலைசாயும்.

இப்போது புரிகிறதா வாலி அவர்களே, என் தமிழ் மயக்கும் தமிழ் என்று......

ஏ.ஆர்.ரஹ்மான் : ஆஹா, ஆஹா.... வைரமுத்து அவர்களே... நான் சமீப காலத்தில் கேட்ட மிக நல்ல தமிழ் வரிகள் இவைதான்...... வாழ்த்துக்கள்......

வாலி : பொறாமையின் பிறப்பிடமே, வஞ்சகத்தின் இருப்பிடமே, கொஞ்சம் அடக்கி வாசி... என் பாடலை நீ நன்கு வாசி, பின் நீ எழுதுவது தமிழ் தானா என்று யோசி!!

வைரமுத்து : எதுகை மோனைகளை சொல்லி, நீ எழுதும் தமிழ் உயிர்கொல்லி. தமிழ் மக்கள் தமிழை மறக்க நீங்கள் எடுக்கும் முயற்சி விரைவில் வெற்றி பெரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் : கவிஞர்களே, பாடல் இருக்கா இல்லையா?? எனக்கு வேறு படங்களும் இருக்கின்றன..... பல ஹிந்தி படங்கள் ஏற்கனவே பெண்டிங்கில் இருக்கிறது

வாலி : ரோபோக்களை கட்டி மேய்க்கும் நம் நாயகனுடன் படத்தின் நாயகி கிடைக்கும் ஒய்வு நேரத்தில், ஆடிப்பாடும் அடுத்த டூயட் பாடல் இதோ ........

என் தலைவா நீ ஒன்று
நான் சேர்ந்தால் நாம் இரண்டு
நம் மழலை வந்தால் நாம் மூன்று
நான் மறை வேதமோ நான்கு.........

வைரமுத்து : இது என்ன ஒரு டூயட் பாடலா, LKG பாடலா??. ரஹ்மான் அவர்களே, இதை கேளுங்கள்........

வாடா என் தலைவா நீ வா
ஓடி வந்து அணைக்க வா வா
தர வேண்டும் கோடி முத்தம்
அதுவும் இனி நித்தம் நித்தம்

வாலி : அடடா, இவன் கொஞ்சம் நல்லாவே தமிழ் எழுதுவான் போல இருக்கே... ரஹ்மான நம்ம பக்கம் வளைக்க ட்ரை பண்ணுவோம்..... ரஹ்மான், இந்த பாட்டு கேளுங்க.....

தலைவா நீ சிலிகான் சிங்கம்
உனக்காக தானே என் அங்கம்
காத்திருக்கு சீக்கிரம் வாடா
போத்திக்கதான் போர்வையாய் வாடா

ஏ.ஆர்.ரஹ்மான் : வாலி, இந்த பாட்டு சூப்பர். இத ஒகே பண்ணிடலாம். நெக்ஸ்ட்.

வைரமுத்து : ஆஹா, வாய்ப்பு நழுவி விட்டதே?? என்ன செய்யலாம்?? நம்மால் முடிந்தது, பழைய குப்பையை கிளறி, வாய்ப்பை பறிக்கலாம்..... வாலி அவர்களே, முன்பு கூட, நீங்கள் ஒரு பாடல் எழுதினீர்கள்... அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்று...... பாடலின் இசையில், படமாக்கப்பட்ட விதத்தில், நடிப்பில் என்று எந்த குறையும் இல்லை... ஆனால், நீர் எழுதிய பாடலில்தான் குறை இருந்தது புளுகு கவிஞரே !!!

வாலி : வேண்டாம் அன்பரே....அந்த பாடலின் இசையை குறை கூறினால் கூட பொறுத்து கொள்வேன்... ஆனால், அந்த பாடலை குறைகூறினால் பொறுத்து கொள்ள மாட்டேன்..... அம்மா என்றழைக்காத ஒரு உயிர் உண்டோ, இந்த பூமியில்??

வைரமுத்து : வாலி அவர்களே, வேண்டாம் என்னிடம் விஷ பரீட்சை. சரி, இதற்கு பதில் சொல்லுங்கள்... எந்த சர்ப்பமாவது அம்மா என்று அழைத்து கேள்விப்பட்டிருக்கிறீரா? இல்லை, என்ற கரடியாவது அம்மா என்று கூப்பிட்டதை காட்ட முடியுமா?? நான் கண்ட கருங்குயில் கூட கூ கூ என்று தானே கூவுகிறது? இதில் இருந்தே தெரிய வில்லை, நீர் ஒரு புளுகு மூட்டை கவிஞர் என்று?

ஏ.ஆர்.ரஹ்மான் : ஐயோ, இவனுங்க ரெண்டு பேரோட இம்சை தாங்க முடியலையே... பாட்டு எழுத கூப்பிட்டா, இவனுங்களோட சண்டையில இந்த தமிழை கேட்டு கேட்டு, என் தலையே வீங்கி போச்சு....... மொதல்ல இவனுங்கள தொரத்துவோம்......

சரி சரி கவிஞர்களே, உங்க ரெண்டு பேருக்குமே ஆளுக்கு 3 பாட்டு குடுத்துடலாம்னு நெனச்சு, "எந்திரன்" படத்து பாடல்களை கூட 5-ல இருந்து, 6-ஆ மாத்திட்டேன்.

ஆனா, இப்போ நீங்க இந்த சூப்பர் மூட பார்த்த உடனே, அத கெடுக்காம, அந்த 6 பாட்டுக்களையும் நா.முத்துகுமார், பா.விஜய் இந்த ரெண்டு பேரை வச்சு எழுத சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன்.....

அப்போதான், பல்லேலக்கா பல்லேலக்கா மாதிரி ஹிட் பாடலும், ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட் மாதிரி புரியாத மாதிரி எழுதி சூப்பர் ஹிட் ஆகர பாட்டுங்க எலாம் கிடைக்கும்......... அப்புறம் உங்க ரெண்டு போரையும் கூப்பிடறேன்....... வணக்கம் ......

பாடல் எழுத சான்ஸ் கிடைக்காது என்று தெரிந்த உடன், இரண்டு கவிஞர்களும் ஒருவர் ஜிப்பாவை ஒருவர் கிழிக்க ஆரம்பிக்க, இந்த சாக்கில் வாலி, வைரமுத்து மேல் தன வாய் தாம்பூலத்தை தெளிக்க, அங்கே, ரத, கஜ படைகள் ஏதுமின்றி ஒரு போர் உருவாவதை கண்டு, ஏ.ஆர்.ரஹ்மான் தன ரெகார்டிங் ஸ்டூடியோவின் பின்வாசல் வழியாக தலை தெறிக்க ஓடுகிறார்.......

4 comments:

மணிஜி said...

:-))))

R.Gopi said...

//தண்டோரா said...
:-))))//

**********

"தல"

நல்லா கீதா, லேதா?? அத்த மட்டும் சொல்லுபா.....

வால்பையன் said...

அண்ணே பெருசா போச்சுன்னா நகைச்சுவையும் எரிச்சலாகிவிடும்னே!

சிறுசா எழுதுங்க!

R.Gopi said...

//வால்பையன் said...
அண்ணே பெருசா போச்சுன்னா நகைச்சுவையும் எரிச்சலாகிவிடும்னே!

சிறுசா எழுதுங்க!//

************

முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வால்பையன்..........

இன்னும் நெறைய எழுதி இருக்கேன்......... அதையும் படிச்சுட்டு சொல்லுங்க "தல".

அப்படியே நீ சொன்ன மேட்டர் ""நோட்டட் பா"