Saturday, November 27, 2010

அதிரடி டைரக்டர்கள் 2011 - ஒரு டெர்ரர் சந்திப்பு



2010-ம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், ௦ 2010-ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் "எந்திரன்" உள்ளிட்ட ஒரு சில படங்களே வெற்றி பெற்ற நிலையில் கோலிவுட்டின் முக்கிய டெர்ரர் டைரக்டர்கள் ஒன்று கூடி, திரையுலகின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கிறார்கள்...

நடிகர்களின் சம்பளம், வீண் செலவுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தினால் மட்டுமே தாக்குபிடிக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளை தெரிந்து கொள்வோம், வாருங்கள்...

**************

பேசாம நாம பழைய வ்யாவாரத்துக்கே போயிடலாம்னே.... ஏதோ கல்லால ஒக்காந்தோமா, புண்ணாக்க நோண்டிட்டு, புளிய உருட்டிட்டு...... என்னன்னவோ செய்யலாம்..... இங்க பாருங்க, நேத்து வந்த பயலுவ எல்லாம், நம்மள பார்த்தா மருவாத குடுக்கறதில்ல..... காலு மேல காலு போட்டு உக்காந்து இருக்கானுவ.... என்று "பூமநாராயணன்" சீறினார்.....

இன்னிக்கி தான்யா சரியா சொன்னீரு.... என் படத்துல நடிக்கற ஹீரோ, ஹீரோயின் பண்ற அலப்பறை கூட தாங்கலேய்யா என்று "டிங்கர் பிச்சான்" பொருமினார்.... அதுலயும், அந்த பிஜயகோந்து வருத்தகரி”ன்னு ஒரு படம் டைரக்ட் பண்ணி இருக்காராம்.... படத்துக்கு படம் கம்பியில தொங்கி சண்டை போடற அந்தாளுக்கு டைரக்‌ஷன பத்தி என்னய்யா தெரியும்.... .

கரெக்டுங்க.... என் படத்துல பாருங்க.... ஒப்பனிங் சீன்ல ஹீரோ ஒரு சின்ன கிராமத்துக்கு ரயில்ல வந்து எறங்கரார்னு அந்த "பிஜய்" கிட்ட கதை சொல்றேன்.... ரயில் எல்லாம் வேணாம்.... சின்னதா ஒரு ஹெலிகாப்டர்ல வந்து எறங்கற மாதிரி சீன் வைய்யுன்னு பெரிய சீன் போடறாரு... "கொட்டாம்பட்டி"க்கு வர்ற ஹீரோக்கு ரயில் வண்டியும், வெளியே போனா, மாட்டு வண்டியும் போதாதா, எதுக்குங்க ஹெலிகாப்டர் என்று “டைரக்டர் பீரரசு” பட்டாசு வெடிக்கிறார்.

பேசுறது எதுவா இருந்தாலும் சீக்கிரம் பேசிட்டு என்னை மட்டுமாவது அனுப்புங்க... இன்னிக்கி ஏ.வி.எம்.ல "3 டகால்டிகள்' படத்தோட ஓப்பனிங் சீன் ஷூட்டிங் இருக்கு, 3000௦௦௦ ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ் வெயிட் பண்றாங்க என்று அவசரப்படுத்துகிறார் டைரக்டர் "பங்கர்"... பாருங்களேன்.... இவனுங்களும், இவனுங்க இம்சையும், ஒருத்தன் பீரங்கி மூக்குல பொடிய வைச்சு திணிக்கறான், இன்னொருத்தன் காதை நோண்டிகிட்டு இருக்கான் என்றபடி...

நான் இங்க எதுக்கு வந்தேன்னே தெரியல, எனிவே இங்க வந்து இவனுங்க பண்ற இந்த காமெடியெல்லாம் பார்த்தா, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் என்றபடி மோட்டுவளையை பார்த்தபடி தாடையை சொரிந்தார் "பவுதம் பேனன்". இந்த மாதிரி ஷாட் வச்சா நல்லா இருக்குமா இல்ல ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரையும் வானத்து மேல‌ இருந்து பறந்து வ‌ர்ற‌ மாதிரி ஒரு ஷாட் வ‌ச்சு அச‌த்திடுவோமா என்று தனக்கு தானே பேசி சிரித்துக்கொண்டிருந்தார்...

அப்போது "தமிழ் கரடி" ஆவேசமாக சவுண்ட் விட்டுக்கொண்டு உள்ளே வர அந்த ஏரியாவே

அதகளமாகிறது....

டேய்.....யார் கிட்ட, என்கிட்டயேவா..... நான் தமிழன்டா.....தமிழன்..... யூத்து... தெரியும்ல... நான் இப்போ மட்டும் இல்ல, எப்போவும் பச்சை தமிழன், க்ரீன் டமிலன், யூ நோ... டெய்லி டூ ஹவர்ஸ் ஜிம் கோயிங்.....நெக்ஸ்ட் ஃபில்ம் ஹீரோ.... மத்த எல்லாரும் ஜீரோ என்றெல்லாம்

கதறி புஸ் புஸ் என்று மூச்சு வாங்குகிறார்......

வர்றியா..... ஒனக்கும் எனக்கும் ஒரு சவால்.... மவுண்ட் ரோடு நடுவுல, இல்லேன்னா, சட்டசபை வாசல்ல ஒரு மேடை போட்டு ABCD சொல்ல ஆரம்பிப்போம்.....15௦ நாள் தொடர்ந்து சொல்லுவோம்....யாரு நிறைய தடவை சொல்லுறாங்கன்னு பார்ப்போமா?.....

"நட்ட நடு ரோட்டுல 44 வவ்வாலு.... நானும் அங்கே விட்டேன் பாரு அதுக்கு தானே சவாலு!!! இந்த டயலாக் தொடர்ந்து 10 நாள், மவுண்ட் ரோடு நடுவுல, இல்லன்னா, போயஸ் கார்டன் வாசல்ல நின்னுட்டு கத்தி சொல்லுவியா? நான் சொல்லுவேன், ஏன்னா நான் மரத்தமிழன் என்றெல்லாம் ”கரடி” சவுண்ட் விடுவதை பார்த்து அனைவரும் மூச்சு விட மறந்தனர்....

ஐயோ.....இன்னிக்கி செத்தோம்டா நாம என்று எல்லாரும் கோரசாக மனதிற்குள் கூவுகின்றனர்..... கரடி எங்கேயோ வெளியூர்ல ஷூட்டிங் போயிடுச்சுன்னு சொன்னதாலதான், இன்னிக்கி இந்த மீட்டிங் வச்சோம்.... ஆனா, கரடி எப்படியோ தப்பிச்சு இங்க வந்துடுச்சே, இன்னிக்கி நம்ம எல்லாருக்கும் சங்குதான், ரிபீட் அபீட்டுதான் என்று நினைத்தனர்...

இந்த நாட்டுல விதவிதமா தப்பு பண்ணுன எத்தனையோ சமூக விரோதிகளை சட்டத்துல இருக்கற ஓட்டைய எல்லாம் சொல்லி தந்து, என் படம் மூலமா தப்பிக்க வச்சேன்... இன்னிக்கு என் பையன் “குஜய்” நடிக்கற ஒரு படத்த கூட எப்படி ஓட வைக்கறது என்ற வித்தையை எனக்கு யாரும் கற்றுத்தரவில்லையே என்று அழுது கொண்டே அந்த மீட்டிங் நடக்கும் இடத்திற்கு ஒரு பை நிறைய ஈர கர்சீஃப் எடுத்துக்கொண்டு வருகிறார் எஸ்.ஏ.சுந்தரசேகர் ....

என்னையா நடக்குது இந்த நாட்டுல..... ஒரு தமிழனுக்கு உள்ளே வர அனுமதி இல்லையா..... ......ஹௌ கேன் ஐ டாலரேட் திஸ் நான்சென்ஸ் என் அடுத்த படம் வரட்டும்.... ஆல் ஓவர் தி வேல்ட் ஒரே ஒரு ஹீரோதான்.... அதுவும் நான்தான் என்றபடி க்ரீன் ஷர்ட், ப்ளாக் ஜீன்ஸில் ”டைரக்டர் சாரதிராஜா” வருகிறார்........ அப்புறம் என்னோட ”சிவப்பு ரோஜாக்கள்” படத்தை இங்கிலீஷ்ல "எ பேர் ஆஃப் பளாக் ரெட் ரோஸஸ்”னு என் பையன் “பனோஜ்” வச்சு எடுக்கப்போறேன்னு சவால் விடுகிறார்...

அந்த படம் மட்டும் வரட்டும்....அப்புறம் பாருங்க......கோலிவுட், மாலிவுட், பாலிவுட், ஹாலிவுட், பிளைவுட்னு எல்லா வுட்டும் என்கிட்டே வந்து கால்ஷீட் கேட்டு நிக்கும்..... என்றெல்லாம் பிதற்றுவதை பார்த்து "பீரரசு", டிங்கர் பிச்சான்", பூமநாராயணன் எல்லாம் டெர்ரர் ஆகிறார்கள்.

சற்றே தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு, தான் ஏற்கனவே எழுதி வைத்த தீர்மானங்களை டைரக்டர்கள் சங்க தலைவர் "பூமநாராயணன்" வாசிக்கிறார்....

***********************

இனிமேல் நடிகர், நடிகைகளுக்கு கேரவன் வண்டி கிடையாது..... டெம்பரரியா சூட்டிங் நடக்கற எடத்துல போடற டெண்ட் கொட்டகைல தான் தங்கணும்....

சூட்டிங் நடுவுல குடிக்க ஜூஸ் எல்லாம் கிடையாது..... வெறும் தண்ணீர்தான்.... ஒரு ஓரமா பானையில இருக்கும்.... அதுவும், அவிய்ங்கவிய்ங்க போய் தானே எடுத்து குடிக்கணும்.... அவிய்ங்களுக்கு உதவிக்கு ஆள் எல்லாம் கிடையாது...

படம் முழுக்க ஹீரோ, ஹீரோயினுக்கு மொத்தமே 5 டிரஸ்தான் .....

மத்தியானம் சாப்பாடு வெறும் கம்பங்கூழும், பச்சை மிளகாயும்தான்.... வெங்காயம் வேணும்னா, அவிய்ங்கவிய்ங்க வீட்டுல இருந்துதான் எடுத்து வரணும்... வேற எந்த சாப்பாடும் சினிமா கம்பெனி குடுக்காது....

லன்ச் டயத்துல தூங்கறதுக்கு ஆளுக்கு ஒரு பாய் மட்டுமே தரப்படும். போர்வை வேண்டுமென்றால் அவரவர்கள் வீட்டிலிருந்தே எடுத்து வர வேண்டும். அது அவர்கள் இஷ்டம். இதில் நிர்வாகம் தலையிடாது. ஆனா, ஒரு விஷயம், கண்ண மூடி படுத்து கெடக்கலாம், கண்டிப்பா, தூங்கக்கூடாது....

வீட்டிலிருந்து ஷூட்டிங் நடக்கற இடத்திற்கு வர்றதுக்கு ஆளுக்கு ஒரு சைக்கிள் மட்டுமே தரப்படும்..... வர்ற வழியில ஹீரோ, அந்த படத்தோட காமெடி நடிகர பிக்-அப் பண்ணி டபுள்ஸ் அடிச்சுட்டு சூட்டிங் நடக்கற எடத்துக்கு வரணும்....

தமிழ் படங்களின் பெயர் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.... இது ரொம்ப முக்கியம்.... அந்த மாதிரி பேரு வைக்கற படத்துக்கு மட்டுமே வரிவிலக்கு

படத்துல நடிக்கற எல்லாருக்குமே தினக்கூலி அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்படும்.

*****************

இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படாதவர்கள், தானே சொந்தமாக படம் தயாரித்து, டைரக்ட் செய்து நடிக்கட்டும் என்று இந்த சங்கத்தின் சார்பாக கூறிக்கொள்கிறேன்.....என்று அறிக்கையை வாசித்து முடித்தார்.....

இதை கேட்ட "பீரரசு" "கரடி" போன்ற ஹீரோ டைரக்டர்கள் கொதித்து எழுந்தனர்......

நீங்கள் போடும் சட்டம் எல்லாம், ஹீரோவாக மட்டும் நடிக்கும் நடிகர்களுக்குத்தான் பொருந்தும்...... எங்களை போன்ற படைப்பாளிகளுக்கு பொருந்தாது என்று ஜெர்க்கினர்....

படைப்பாளி என்ற வார்த்தையை கேட்டதும் நன்றாக தூங்கி கொண்டிருந்த "டிங்கர் பிச்சான்"...சட்டென்று எழுந்து கரடி, பீரரசு, கிந்தர் எல்லாம் படைப்பாளிகள் இல்லை.... அழிப்பாளிகள்.... இந்த படவுலகில் படைப்பாளி என்றால் அது இந்த "டிங்கர் பிச்சான்" மட்டும்தான் என்று ஓவர் அலப்பறை விட்டு, நாற்காலியை எடுத்து “கரடி”யின் மீது வீசுகிறார்....

கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பித்த “கரடி” அவர் பின் நின்றிருந்த "பீரரசு", எஸ்.ஏ.சுந்தரசேகர், மற்றவர்கள் சங்கமாவது.... சுங்கமாவது.... கலைங்கடா எல்லாத்தையும் என்றபடி தன் தலையை கலைத்துக்கொண்டு, சட்டையை கிழித்துக்கொண்டு "டிங்கர் பிச்சான்" நோக்கி ஆவேசமாக பாய்ந்தனர்....

சங்கத்தின் தீர்மானம் எதுவும் செல்லாது, இவங்க சொல்ற மாதிரி என்னோட முழு படமா, அந்த படத்துல ஒரு சீன் கூட எடுக்க முடியாது என்று கூவிக்கொண்டே “பங்கர்” பெஞ்ச் அடியில் பதுங்குகிறார்.... பெஞ்சின் கீழே “பவுதம் பேனன்” ஏற்கனவே பயத்துடன் பதுங்கி இருக்கிறார்...

நிலைமை மோசமாவதை கண்ட "பூமநாராயணன்" சங்கத்தின் பின் வாசல் வழியாக பாய்ந்து தாவுகிறார்.... "கரடி", "பீரரசு" போன்றோர் ”பூமநாராயணன்” மற்றும் “டிங்கர் பிச்சான்” ஆகிய இருவரையும் தாக்க கையில் அரை செங்கல் எடுத்து கொலைவெறியுடன் துரத்துகின்றனர்......

அந்த இடமே காலியானதும், யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.............. இங்கிட்டு நான் ஒரு டைரக்டரு இருக்கறதையே மறந்துட்டீங்களா? இப்போ தான் “வருத்தகரி” பட சூட்டிங் முடிச்சுட்டு வர்றேன்.... என்னிய விட்டுட்டு இந்த கூட்டம் எப்படி நடக்குதுன்னு பார்க்கறேன்.... என்றெல்லாம் சொல்லிக்கொண்டு உள்ளே வந்தவர், யாரும் இல்லாததை பார்த்து, அதானே.... நான் கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா, அதுவும் ஒண்ணு ரெண்டு கேள்விக்கு பதில் சொன்னா, தொடர்ந்து மூணு நாள் மூவாயிரம் கேள்வி கேப்பேன்ல.... அதுக்கு பதில் சொல்ல ஒங்களுக்கு மூணு வருசம் ஆகுமே என்றெல்லாம் பிதற்றியபடி, அங்கிருந்து தள்ளாடி ”வெளிநடப்பு” செய்கிறார் “பிஜயகோந்த்”....

மொத்தத்தில் அந்த ஏரியாவே "கலீஜ்" ஆகிறது....

(ஆமாம்... இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்.....)

Tuesday, November 23, 2010

ச‌ங்கி ம‌ங்கி அதிர‌டி அல‌ப்ப‌றை - 23.11.10




எலே எடுபட்ட பயலே சங்கி... எப்படிடா இருக்க??

வாலே மங்கி... இன்னாடா மேட்டரு? நெம்ப நாளா ஆளயே காணுமேடா? உள்ளார எங்கயாவாது போயி வந்தியா??

இன்னாடா, காலைலயே டெர்ரர் கேள்வி எல்லாம் கேக்கற?? நீயே என்னிய அனுப்பிடுவ போல கீதேடா.... நானு இங்க தாண்டா இருக்குறேன்... சொல்லுடா... இன்னான்னா மேட்டரு வச்சுருக்குற..

சொல்றேன்டா, கேட்டுக்கோ.. நமீதா மேட்டரு, நம்ம கமல்தாசன் மேட்டரு... கேப்டன் மேட்டரு... அல்லாத்தையும் சொல்றேன்...

நம்ம நமீதா சூசைட் பண்ணிடுச்சின்னு எந்த பேமானியோ சொல்லிகினான் போல... அது ஒடனே எல்லா பத்திரிக்கை காரய்ங்களயும் கூப்பிட்டு, இனிமே பொடவை கட்டுற மாதிரி ரோல்ல தான் நடிக்க போறேன்... கொஞ்ச நாள் எந்த படத்துலயும் நடிக்கலேன்னா ஒடனே செத்துட்டேன்னு சொல்றாய்ங்களேன்னு அயுதுச்சாம்...... முன்னாடி ஒக்காந்து இருந்த பத்திரிக்கை காரய்ங்க எல்லாம் அத்த பார்த்து பெருமூச்சு விட்டாய்ங்களாம்....

அப்டியா?? டேய்.... ஒயுங்கா சொல்லுடா.... அவிய்ங்க பெருமூச்சு விட்டது, நமீதா அயுவுறத பார்த்து தானேடா?...

ஆமாண்டா.....பொறவு... நம்ம கமல்தாசன் அவரோட "மன்மதன் அம்பு" படத்தோட கேசட் ரிலீஸ் சிங்கப்பூர்ல பண்ணுனாராம்.....

இன்னாட சொல்ற, படத்தோட கேசட்டா?

டேய் டேய் மட மங்கி... படத்தோட பாட்டு கேசட்டுடா... படம் கேசட் இல்ல... இன்னாடா இம்புட்டு லொள்ளு பேசுத நீயி.....

சரி.....சரி.... சூப்பர் ஸ்டாரு மலேசியாவுல பண்ணிட்டாரு இல்ல.... அதான் இவரு சிங்கப்பூர்ல ரிலீஸ் பண்ணுனாரா.... சூப்பருடா சங்கி.... சரி, கேசட் ரிலீஸ் பண்ண சொல்ல அவர பேச சொன்னாய்ங்களா??

ஆமா... அவரு பேசினாரு... ஆனா, வயக்கம் போல, யாருக்கும் பிரியல... பாடுனாரு...... யாருக்கும் ரசிக்கல.... அப்புறம் நம்ம கமல்தாசன் கவிதை படிச்சப்போ, அமுல் பேபி மாதவன் ரொம்ப அயுதாராமாம்....

இன்னாத்துக்குடா.... நம்மாளு படிச்ச கவிதையை கேட்டா அயிதாரு?

டேய்....டேய்... வில்லங்கம் புடிச்சவனே...... பார்த்து சூதானமா பேசுடா... ரெண்டாவது தடவ படிச்சா, வேற அர்த்தம் வருதுடா... அந்த மேட்டரே மாதவனே சொல்றாருபா.... நீ கேட்டுக்கோ.....

கமல் எனக்கு கடவுள் போன்றவர். அவர் மன்மதன் அம்பு படப் பாடலைப் பாடி நடனமாடியபோது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன், என்றார் மாதவன்.
மன்மதன் அம்பு படத்தில் நீலவானம் என்று துவங்கும் பாடலை கமல் எழுதி இருக்கிறார். அற்புதமான பாடல் அது. கேசட் ரிலீஸப்போ, அதை கேட்டபோது நான் குழந்தைபோல் அழுதேன். ஆண்கள் அழக் கூடாது என்பார்கள். ஆனால் கமல் பாடல் என்னை அழ வைத்தது. விழாவில் பங்கேற்ற பலர் கண்களில் கண்ணீரை பார்த்தேன்..", என்றார்.

இதுக்கு நம்ம கமல்தாசன் ஒடனே மாதவனாண்ட, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல.... மக்களே / ஆத்தீகவாதிகளே ....உங்களின் பக்தி, கடவுள் நம்பிக்கை எல்லாத்தையும் உங்கள் வீட்டின் நான்கு சுவற்றிற்குள் வைத்துக்கொள்ளுங்கள்.... பொதுவில் அதைப்பற்றி பேசாதீர்கள் என்றார்.....

சரி.... அடுத்த மேட்டருக்கு வாடா.... கேப்டன் என்னா பண்ணுனாரு?

சென்னையில நேத்து கேப்டன், அவிய்ங்க கச்சிக்காரய்ங்க எல்லாம் ஒண்ணு கூடி...

ஆஹா... ஒண்ணு கூடிட்டாய்ங்கடா... ஒண்ணு கூடிட்டாய்ங்க... சரி...இன்னா பேசிக்கினாய்ங்க...

இன்னானா... அவரு நடிச்ச படம் “விருத்தகிரி”யோட கேசட் ரிலீஸ் பண்ணுனாரு....

இவருமாடா.... ஆமாம், இவரு இன்னமுமாடா நடிக்கறாரு.... யார நம்பி? இவருக்கு கடைசியா “ரமணா” மட்டும் தானடா ஓடுச்சு.... அப்புறம் வரிசையா டெர்ரர் படங்கள் தானே ரிலீஸ் பண்ணுனாரு.....

டேய்... நீ தெரிஞ்சுதான் கேக்கறியா... நம்ம ஆளுக்கு நெம்ப தகிரியம்டா... அதனால, இந்த வாட்டி அவரே “விருத்தகிரி” படத்த டைரக்ட் பண்ணிட்டாருடா.... நெனச்ச எடத்துல பாட்டு வச்சுக்கலாம், நெனச்ச எடத்துல சண்டை வச்சுக்கலாம்.... நெனச்ச எடத்துல அரசியல் வசனங்கள வச்சுக்கலாம்.... எப்பூடி???

அதுவும் கேசட் ரிலீஸப்போ படா சவுண்டு விட்டாராமே....

அத்த ஏண்டா கேக்கற.... படா காமெடி வசனம் சொன்னாருடா.... அவரோட விருத்தகிரி படத்த ரிலீஸ் பண்ண விடாம தடுக்கறாய்ங்களாம்.... அப்படி பண்ணுனா, அவரு என்னா பண்ணுவேன்னு சொன்னத பாருடா.....

//"எனது முந்தைய படங்களான தர்மபுரி, சுதேசி, சபரி போன்ற படங்களை வெளியிட முடியாமல் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தேன். அதே பிரச்சினைகள் விருதகிரி படத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

இந்த படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த படத்தைத் தடுத்தால் விஜயகாந்த் யார் என்பதைக் காட்டுவேன். எனக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். படத்தை எப்படி ரிலீஸ் செய்வதென்று தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்.
ஒரு விஷயத்தை தெளிவாக கூறிக்கொள்கிறேன். நான் யாரையும் நம்பி அரசியலுக்கு வரவில்லை. மக்களையும், தெய்வத்தையும் நம்பித்தான் அரசியலுக்கு வந்தேன். எனது மடியில் கனமில்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை.//
படா டெர்ரர் தாண்டா...... அப்போ, படத்துல நெறைய அரசியல் சரவெடி வசனங்கள் இருக்கும்னு சொல்லு.....

ஆமாண்டா.... மெய்யாலுமே அது தாண்டா படம் பூரா இருக்கும்....

ஏண்டா, வர வர நம்ம நாட்டுல இவ்ளோ விசப்பரீட்சை எல்லாம் நடக்குது... ஒருத்தரு பிரம்மாண்டமா மலேசியாவுல கேசட் ரிலீஸ் பண்ணுனா, இன்னொருத்தர் அதுக்கு போட்டியா, சிங்கப்பூர்ல கேசட் ரிலீஸ் பண்ணுராரு... இன்னொருத்தரு, கண்டிப்பா எந்த பாட்டுமே ஹிட் ஆகாதுன்னு தெரிஞ்சு, ஒரு மீஜிக் டைரடக்கர இம்சை பண்ணி, ஒரு அஞ்சு பாட்டு வாங்கி போட்டு, அத்த ஒரு கவர்ல போட்டு, கச்சி காரய்ங்கள எல்லாம் கூப்பிட்டு, ரிலீஸ் பண்ணி.... அட போப்பா......வயக்கம் போல இல்லாம, இன்னிக்கு எனிக்கு ஜாஸ்தியா தல சுத்துதுடா...

சரி... வேற ஏதாவது மேட்டர் வேணுமா??

அய்யோ.... யப்பா.....அப்பாலிக்கா மிச்ச மேட்டரு எல்லாம் சொல்றா... நான் நேர அங்கனதான் போறேன்... ஆமாம்...டாஸ்மாக்தான்..ஒரு ஆஃப் அடிச்சாதான் சுத்தறது நிக்கும்... இன்னாது... இன்னாடா இன்னா சுத்துதுன்னு கேக்கற... என் தலதாண்டா மட மங்கி பயலே...

Monday, November 1, 2010

மன்மத அம்பு - கப்பலில் காதல்

அகில உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் (!!) "மன்மத அம்பு" ஷூட்டிங் முடிந்து, பாடல் வெளியீடு நவம்பர் 20௦ அன்று சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற இருக்கும் நிலையில், படத்தை பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்களேன் என்று கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை அணுக, அவர் என்னை கேட்பதை விட, அவரை கேட்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்மிடம் கை காட்டிய இடத்தில் ............................அமர்ந்திருந்தவர் கமல்ஹாசன்....

நிறைய கேள்விகள் கேட்க நினைத்தாலும், அவரின் கோபத்தை மனதில் கொண்டு சில கேள்விகள் மட்டுமே கேட்டோம்...

நிருபர் : வணக்கம் சார்....

கமல் : வணக்கம்.....என்னை காண வருகை தந்திருக்கும் உங்களை வருக வருக என்று வரவேற்கும் ஆவல் எனக்கு உண்டு.. ஏனென்றால், வந்தவர்களை விருந்தினர்களாக கருதி வரவேற்பது என்பது தமிழனின் பண்பாடு என்றாலும், அந்த பண்பாடு இன்னமும் அழியாமல் உள்ளதா என்பதை அறியாமல் உங்களை வரவேற்பதில் சிறிய சிக்கல்... ஆகவே.........

நிருபர் : இவ்ளோ சுருக்கமா வரவேற்றதற்கு மிக்க நன்றி சார்... இப்போ, கேள்விகளை கேட்கலாமா?

நாங்க எல்லாரும், எப்போவும், தெரிஞ்சுக்க ஆசைப்படற அபூர்வ சகோதரர்கள் படத்துல வர்ற "அப்பு" பத்தி ஏதாவது சொல்லுங்களேன்..

கமல் : சொல்றேன்.. சின்ன வயசுல, நாங்க வெளையாடற இடத்துல ஒரு குட்டை இருந்தது... அதுல, "குப்பு"ன்னு ஒரு குள்ளமான பையன் வந்து, டைவ் அடிப்பான், நீச்சல் அடிப்பான், மீன்கள் பிடிப்பான்.....
ஆனாலும், அவனை பார்க்கும் அனைவரும், கள்ளனை நம்பினாலும், குள்ளனை நம்பாதே என்று சொல்லி கேலி செய்வார்கள்...

அன்று முடிவு செய்தேன்...குட்டையானவர்கள் கெட்டவர்கள் இல்லை என்று நிரூபிப்பது என்று...
பின்னாளில் “குட்டையானவன் கெட்டவனா” என்றெல்லாம் பல நாட்கள் யோசித்து, ஒரு திரைப்படமாக எடுத்து, வெண்திரையில், அதை நிரூபித்தேன்... எனவே, அந்த அபூர்வ சகோதரர்கள் படமும், அதில் வரும் குள்ள "அப்பு"வும், உலகத்தில் உள்ள அனைத்து குள்ளர்களுக்கும் சமர்ப்பணம்...

நிருபர் : இப்போது நீங்கள் நடித்து வெளிவர இருக்கும் "மன்மத அம்பு" படம் பற்றிய ஒரு கேள்வி.. அது, ஏற்கனவே வெளிவந்த "டைட்டானிக்" படத்தின் காப்பி போல் இருக்கிறது என்று இணையத்தில் நிறைய தேள்கள் தம்பட்டம் கொட்டி வருகிறதே!!?

கமல் : உங்களின் முதல் கேள்வியே கோணலாக உள்ளது... இது போல் எல்லா படத்திற்கும் இதையே சொல்லிக்கொண்டு திரியும் நிறைய செந்தேள் செந்தாமரைகளை பார்த்தவன் நான்....இரண்டும் பிரம்மாண்டமான கப்பலில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதை தவிர எந்த ஒற்றுமையும் இல்லை... ”மன்மத அம்பு” இன்றைய கல்லூரி இளைஞர்களுக்கு காதலை சொல்லி தரும் ஒரு புதிய முயற்சி... நீங்கள் என்னை கோபமுற செய்யாமல் கேள்விகளை கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
நிருபர் : மன்மத அம்பு படத்தை பற்றி....
கமல் : படம் ஷூட்டிங் முடிந்து விட்டது.... சொகுசு கப்பலில் எடுத்துள்ளோம்... தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்...
நிருபர் : இதெல்லாம் தெரியுமே... தெரியாதது ஏதாவது?
கமல் : தெரிந்த விஷயங்களை மேலும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்... தெரியாத விஷயங்கள் தெரியாததாகவே இருக்கட்டும் என்று திரிஷா என்னிடம் சொன்னதை நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை...
நிருபர் : படத்தில் பாடல்கள் இருக்கிறதா? பாடல்களை படத்தில் வைப்பதற்கு நீங்கள் எதிரி என்றும், எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும், டூயட் பாடல்களில் நடிக்க மாட்டீர்கள் என்றும் வாலி ஒரு விழாவில் உங்களை பற்றி சொன்னாரே...
கமல் : கவிஞர் வாலி அவர்கள் சொன்னது பற்றி எனக்கு எதுவும் தெரியாது... ஆனால், இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள் வைக்கலாம் என்று ரவி சொன்னபோது, அந்த 5 பாடல்களில் 6 பாடல்களை எழுத மட்டும் புதிதாய் ஒரு பாடலாசிரியர் இருக்கட்டும்... மீதமுள்ள பாடல்களை ஏற்கனவே உள்ள பழைய பாடலாசிரியர்கள் எழுதட்டும் என்று முடிவு செய்து, அந்த 6 பாடல்களை மட்டும் ”புதிய பாடலாசிரியர்” ஆன நானே எழுதி விட்டேன்...
நிருபர் : என்ன? 5 பாடல்களில் 6 நீங்கள் எழுதி விட்டீர்களா? அய்யோ... தல சுத்துதே... சரி சார்... முன்னாடி “யாவரும் கேளிர்”னீங்க, அப்புறம் “காருண்யம்”னீங்க... இப்போ திடீர்னு அதென்ன ஒரு ரொமாண்டிக் தலைப்பு “மன்மத அம்பு”....?
கமல் : பெயரளவில் மட்டுமே வேறுபட்டாலும், பொருளளவில் இந்த மூன்றுமே ஒன்று தானே....
நிருபர் : மன்மத அம்பு கேட்கவா, பார்க்கவா?
கமல் : முதலில் நவம்பரில் பார்க்க (ஏன்னா, அப்போ தானே ஆடியோ ரிலீஸ்), பின்னர் டிசம்பரில் பார்க்க (அப்போ தான் படம் ரிலீஸ்)...
நிருபர் : தமிழ் படங்களின் ஆடியோவை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யாமல் வெளிநாட்டில் ரிலீஸ் செய்வது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளாரே?
கமல் : அவர் சொன்னது வேறு ஒருவர் நடித்து வெளிவந்த வேறு ஒரு படத்திற்கு... இந்த படத்தின் பாடல் வெளியீட்டிற்கு அழைத்தால், அவரே வந்து பாராட்டி விட்டு செல்வார்... ஏனென்றால் எனக்கும் அவர்க்கும் பகையில்லை... இதை நான் வெளியில் சொல்வது முறையில்லை... சரி, அடுத்த கேள்வி?
நிருபர் : படத்தின் ஷூட்டிங்கின் நடுவே திரிஷா தொலைந்து விட்டாராமே?
கமல் : தொலையவில்லை... யாருடனோ நட்பு கொண்டு, அவர்களுடன் நாங்கள் எட்ட முடியாத “தொலைவில்” இருந்தார்.... கேட்டால், பழமையான விளையாட்டான கண்ணாமூச்சி ஆட்டம் என்றார்.... இது போன்ற “ஒளிந்து விளையாடும் விளையாட்டு” அவருக்கு மிகவும் பிடிக்கும்...
நிருபர் : எப்போதும் எல்லா படங்களிலும் காமெடி என்று சொல்லி மெட்ராஸ் பாஷை பேசுவீர்களே.... இந்த படத்திலும் அதே போன்ற காமெடி உண்டா.... கெட்டப் சேஞ்ச் புதுசா ஏதாவது ட்ரை பண்ணி இருக்கீங்களா?
கமல் : சமீப காலமாக அதாவது செந்தமிழ் மாநாடு நடந்த பிறகு, செந்தமிழை கரைத்து குடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், செந்தமிழை தவிர மற்ற அனைத்துமே என் நாவுக்கு அந்நியமாகி போய் விட்டது... திஸ் இஸ் நாட் ய ஜோக் மேன்... யு கேன் சி இட் வென் தி மூவி ரிலீஸ்..... ஐ டோண்ட் ஹேவ் எனி கெட்டப் சேஞ்ச் இன் திஸ் மூவி...
நிருபர் : ஆஹா.... ஆங்கிலம் இங்கே செந்தமிழாக மாறி தமிழ் மழை பொழிந்தது... மிக்க மகிழ்ச்சி.... படத்தின் பாடல்களை எல்லாம் எந்தெந்த பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்??
கமல் : நல்ல குரல் வளம் கொண்டவர்களை பாட வைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்ததால், படத்தின் அனைத்து பாடல்களையும் நானே பாடிவிட்டேன்....
நிருபர் : படத்தின் கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றையும் நீங்களே செய்து விட்டீர்களே!!??
கமல் : ஆம்... என் கலை தாகத்தை தணிக்க நான் எடுத்த சிறு முயற்சி தான் இந்த அனைத்து துறை கையாளல் அல்லது உங்கள் பாஷையில் ஆக்கங்களின் ஆக்ரமிப்பு...
நிருபர் : மன்மத அம்பு ஆஸ்கரை குறிவைக்குமா?
கமல் : நான் வச்ச குறி எப்போதும் தப்பிவிடும்.... ஆனாலும், குறித்து கொள்ளுங்கள்....இம்முறையும் குறி வைத்திருக்கிறேன்.. இதுவும் சரித்திரம் சலித்துக்கொள்ள இருக்கும் ஒரு நிகழ்வு தான்... (நீங்கள் அனைவரும் நினைக்கும் அந்த சோர்வு சலிப்பு இல்லை, சல்லடை வழியே கப்பிகளை அகற்றும் அந்த சலிப்பு).... இது புரிந்தால் நீங்கள் புத்திசாலி, புரியவில்லை என்றால் நான் அதிர்ஷ்டசாலி.....
நிருபர் : இன்றைய தமிழ் சினிமா?
கமல் : இன்றளவில் அது மூச்சிழந்து இருக்கிறது.... அதற்கு ஆக்ஸிஜன், அனாசின், நோவால்ஜின் மற்றும் க்ளைகோடின் தருவதற்கு நான் பல வழிகள் வைத்துள்ளேன்... "மன்மத அம்பு" பட ரிலீஸின் போது அதைப்பற்றி அறிவிப்பேன்... இப்போது எனக்கு நிறைய பணிகள் உள்ளது... பாரதி வருகிறேன் என்று அலைபேசியில் தெரிவித்தார்...பாரதி என்றால் பாரதிராஜா இல்லை... இவர் சந்தானபாரதி... கொஞ்சம் நீராகாரம் அருந்தும் பழக்கம் உள்ளவர்.. அப்படியே என் அடுத்த படம் பற்றி விவாதமும் நடைபெற போகிறது... பிற‌கு சந்திப்போம்..
நிருபர் : இந்த சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கி, எங்கள் கேள்விகளுக்கு ”தெளிவாய்” நல்ல முறையில் பதில் சொன்னமைக்கு மிக்க நன்றி சார்...