Thursday, February 5, 2015

டேபிளார்

நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்....

இது அதுவா, இதுவா, அவரா, இவரா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் படித்தால் பிடித்தாலும் பிடிக்கலாம்....

இந்த பதிவு வழக்கம் போல ஒரு ஜோக்கிரி பதிவு தான்..... யாரையும் குறிப்பிடுவது அல்ல.....

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

ஒரு காலைப் பொழுதில் தன் ஆட்டையை போடும் முயற்சியில் சற்றும் மனம் தளராத டேபிளார் தன் கனத்த சரீரம் மற்றும் ஜோல்னா பையுடன் வழக்கமான ஆட்டை வேட்டைக்கு கிளம்புகிறார்…..
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
டேபிளார் : சார் வணக்கம்….

தயாரிப்பாளர் : வணக்கம்….. நீங்க யாரு?

என் பேரு டேபிளார்.... 

பேரே டேபிளாரா? அது சரி….. அதென்ன பெரிய ஜோல்னா பை…. ஏகப்பட்ட கதை எழுதி எடுத்துட்டு ரொம்ப சிரத்தையா சான்ஸ் தேடறீங்களோ?….. உங்களோட விடாமுயற்சி எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு…..

நான் ஒரு எதிர்கால டைரக்டர்…….. ஜோல்னா பையில கதையா? ஹா ஹா ஹா…. டாக்டர் என்னிய டயட்ல இருக்க சொன்னாரு…. அதான், ஜோல்னா பை எடுத்துட்டு நேரா என்னோட ஃப்ரெண்ட் கடைக்கு போயி கொஞ்சமா ஒரு 2-3 கிலோ ஸ்நாக்ஸ் புடிச்சுட்டு வந்தேன்…. இது தீர்றதுக்குள்ளார டிஃபனுக்கு ஒரு வழி பண்ணனும்…….

எதிர்கால டைரக்டர்னு சொன்னீங்களே? அப்படின்னா……….?

அதாவது அடுத்தவன் எடுத்த படத்தை கன்னாபின்னான்னு திட்டறதுக்காக நிறைய டெஸ்க்/டேபிள் ஒர்க் பண்ணினதால டேபிளார்னு பேரு…. எவ்ளோ நல்லா படம் எடுத்து இருந்தாலும் திட்டிடுவேன்…… அப்புறமா டைரக்டர் கிட்ட இருந்து ஃபோன் வரும்….. அவரை மீட் பண்ணி ஒரு கவர் வாங்கிட்டு அவரை என்னோட ஃப்ரெண்டா ஆக்கிட்டு அவரைப் பத்தி ஆஹா, ஓஹோன்னு எழுதுவேன், சொல்லுவேன்….. எதிர்கால டைரக்டர்னா, எவனாவது இளிச்சவாயன் மாட்டினா அவனை ஆட்டைய போட்டு எதிர்காலத்துல ஒரு படம் எடுத்து காட்டுறது…..

அப்படியா? வெளங்கிடும்….. சரி, இதுக்கு முன்னாடி ஏதாவது குறும்படம் அளவுக்காவது எடுத்து இருக்கீங்களா?

ஆமாம் சார்…. ஒரு சூப்பர் படம் எடுத்து இருக்கேன்….. ஒரு பாம்பு படம் எடுத்தப்போ அதை அழகாக படம் எடுத்து இருக்கேன்…. இங்கே பாருங்க…. அந்த கலர்ஃபுல் ஃபோட்டோ!!

என்னங்க இது, ஃபோட்டோவுல எதுவுமே இல்லாம காலியா இருக்கு? பாம்பு எங்க?

அது ஃபோட்டோ பிடிச்சதும் போயிடுச்சுங்க…….

மேட்டர் அப்படி போகுதா? அதை விடுங்க….. சினிமாவுல யாரையாவது தெரியுமா?

ஓ….. நல்லா தெரியுமே… இப்போ தான் உலக நாயகனை பார்த்துட்டு வர்றேன்….

என்னது? உலக நாயகனைத் தெரியுமா? பார்த்துட்டு வர்றீங்களா? என்ன சொன்னாரு?

ஒண்ணும் சொல்லல…. இப்போ தான் உத்தம வில்லன் போஸ்டர்ல பார்த்துட்டு வர்றேன்…. படா ஷோக்கா இஷ்டைல் பண்றாரு….. ஹீ ஹீ ஹீ…….

அட கெரகமே….. எதுவும் சொல்றதுக்கு இல்ல…...சரி, சினிமா பத்தி ஏதாவது படிச்சு இருக்கீங்களா?

சினிமா எடுக்க தெரியாத அளவுக்கு படிச்சுருக்கேன்…. எல்லாரும் எடுத்த சினிமாவ நொட்டை, நொள்ளைன்னு சொல்லி இருக்கேன்…. எப்படி சினிமா வியாவாரம் பண்ணனும்னு ஒரு புஸ்தகம் எழுதி இருக்கேன்…..(ஆனா அது என் படத்துக்கு ஒர்க் அவுட் ஆவாதுன்னு தெரியும்)… கேட்காதே கிடைக்காதுன்னு எல்லாருக்கும் சொல்லி இருக்கேன்…. அப்படியே, நிறைய ஹோட்டல் போய் வகை வகையா சாப்பிட்டு இருக்கேன்…. இருங்க…. நாலு கடலை உருண்டைய உள்ளார தள்ளிட்டே பேசுவோம்…..

சினிமா எடுக்கறதுக்கும் ஹோட்டல் போறதுக்கும் என்ன சம்பந்தம்?

இருக்கே…. இருங்க, கொஞ்சம் முறுக்கு உள்ளார தள்ளிட்டே சொல்றேன்…. எல்லா படத்தோட டிஸ்கஷனுக்கும் போயிடுவேன்…. நான் இது வரைக்கும் சாப்பிடாத ஒவ்வொரு ஹோட்டல்லயும் டிஸ்கஷன் வச்சுக்கலாம்னு கூட்டிப் போய் அவங்க காசுல ஓசியில எல்லாத்தையும் சாப்பிட்டுறுவேன்…. இல்லேன்னா, எல்லா ஹோட்டல்லயும் போயி எப்படி சாப்பிடறது?

ஓகே….. சினிமான்னா என்ன? சொல்லுங்க பார்ப்போம்…..

சினிமான்னா, தியேட்டர் உள்ளார ஃப்ரெண்ட கூட்டிட்டு ஓசியில போய் உட்காரணும்…. அங்கே ஸ்க்ரீன் வெள்ளையா இருக்கும்….. சேர், ஃபேன் எல்லாம் போட்டு இருப்பாங்க…… டிக்கெட் வாங்கி அம்புட்டு பேரும் உட்கார்ந்ததும் படம் போடுவாய்ங்க….. சினிமா ஒரு 2 – 2 ½ மணி நேரம் ஓடும்….. நடுவுல இண்டர்வெல் மணி அடிச்சு வெளியே விடுவாங்க….. அப்போ ஓடிப்போய் சமோசா, பாப்கார்ன், முறுக்கு, காஃபி எல்லாம் சாப்பிடலாம்…. கூட வர்ற எந்த ஃப்ரெண்டாவது ஓசியில வாங்கித் தந்தா!!

ஓ….. எல்லாமே ஓசிதானா? இந்தளவுக்கு சினிமா பத்தி தெரியுமா…..சரி, அப்படியே ஒரு ஒன்லைன் சொல்லுங்க பார்ப்போம்….

ஒரு ரோடு…. அதுல ஒரே ஒரு கோடு….

யோவ்….. என்ன நக்கலா? ஒன்லைன்னா, ஒரு வரியில ஒரு கதை சொல்லுன்னு அர்த்தம்……

ஒரு ஊர்ல ஒரு நரி, அதோட கதை சரி….

ரொம்ப அருமையான ஒன்லைனர்….. இப்போதைக்கு எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரியணும்….. உங்களுக்கு உள்ளூர் படம் பத்தி மட்டும் தான் தெரியுமா, இல்லேன்னா உலகப் படம் பத்தியும் ஏதாவது தெரியுமா?

என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க….. நான் எல்லா ஒலகப் படங்களும் பார்த்து இருக்கேன்…..

அப்படியா, வாவ்வ்வ்வ்…… எங்கே பார்த்தீங்க? ஏதாவது உலகப் பட விழாக்கள்லயா?

நீங்க வேற….. அங்கே எல்லாம் எதுக்கு போகணும்….. பர்மா பஜார் பக்கமா போறப்போ எல்லாம் டிவிடி விக்கற கடையில இருக்கற எல்லா ஒலகப் படங்களோட டிவிடிய எடுத்து, அந்த போஸ்டர் எல்லாம் பார்த்துடுவேன்…. இதுவரைக்கும் இப்படி ஆயிரக்கணக்கான ஒலகப் படங்கள் பார்த்து இருக்கேன்… சில படங்களோட போஸ்டர் செக்ஸிலி ஃபைன் & டிவைனா இருக்கும்……

ஆஹா…. ஓஹோ…. உங்களோட சினிமா அறிவு நெனச்சா எனக்கு புல்லரிக்குது……. உங்க கதை ரெம்ப நல்லா இருக்கு….. அந்த நரி ஒன்லைனர் சூப்பர்….. சொல்லி வைக்கறேன்….. நரி கிடைச்சதும் ஆள் அனுப்பறேன்…. ஸ்டோரி டிஸ்கஷனுக்கு வாங்க…..

ஓ அப்படியா, தேங்க்ஸ் சார்….. இவ்ளோ நேரம் ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணிட்டோம்…… வாங்களேன்….. பக்கத்து தெருவுல இருக்கற முத்து மெஸ் போயி லைட்டா டிஃபன் சாப்டுகிட்டே பேசுவோம்…. அங்க டிஃபன் எல்லாம் டிவைன்….. சாப்பிட்டுட்டே நம்ம படத்தோட கதைய டிஸ்கஸ் பண்ணுனா ஸ்டோரி இன்னமும் கூட நல்லா வரும்….

என்னது ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணினோமா? நீங்க தான் இவ்ளோ நேரம் ஜோல்னா பையில இருக்கற ஐட்டம் எல்லாம் எடுத்து ஏப்பம் விட்டுகிட்டே இருந்தீங்க…… சரி, கையில, பையில ஏதாவது துட்டு இருக்கா….. இருந்தா சொல்லுங்க அப்பாடக்கர் டைரடக்கரே உடனே சாப்பிட போவோம்….

துட்டா…….. அப்படின்னா என்னா சார்…. நான் எப்போவும் வெளியே கெளம்பறப்போ பர்ஸை வீட்டுல வச்சுட்டு வர்றது தான் பழக்கம்….. நீங்க டிஃபன் வாங்கி தந்தா சாப்பிடறேன்…. ஹீ ஹீ ஹீ…..

அப்படியா…. இந்தாங்க ஜில்லுனு ஒரு கிளாஸ் ஐஸ் வாட்டர் குடிச்சுட்டு கெளம்புங்க…..

சார்…. அட்லீஸ்ட் இந்த ஜில்ல் தண்ணி கூட மிக்ஸ் பண்ண ஏதாவது சரக்காவது…..!!!!!!!!!!!!

யோவ் செக்யூரிட்டி…. இந்தாள கழுத்து பிடிச்சு வெளியே தள்ளுய்யா…. ரோட்டுல போறப்போ, வர்றப்போ எங்கே பார்த்தாலும் போட்டு நாலு சாத்து சாத்துய்யா….. இப்போ இவனை வெளியே தள்ளி கேட் சாத்துய்யா……

இவனுக்கு கதை எழுதறதுக்கு, டைரக்ட் பண்றதுக்கு சரக்கு இருக்கோ இல்லையோ, அடுத்தவன ஆட்டைய போட்டு நல்லா சாப்பிடறதுல, சரக்கு அடிக்கறதுல நிறைய திறமை இருக்கு….. அது அவனோட தொப்பைய பார்த்தாவே தெரியுது……

இதுக்கெல்லாம் கவலைப் பட்டா ஆட்டைய போட முடியுமா என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்ட டேபிளார் தன் ஜோல்னாவில் கடைசியாக இருக்கும் ஒரு முறுக்கு பாக்கெட் பிரித்து நொறுக்கிக் கொண்டே அடுத்ததாக எந்த கம்பெனியை ஆட்டைய போடலாம் என்று பிளான் பண்ணிக் கொண்டே தன் ஸ்வீட் ஸ்டால் நண்பருக்கு மிஸ்டு கால் தந்து விட்டு (ஜோல்னா பையில ஸ்நாக்ஸ் காலி…..), லஞ்ச் டைம் ஆயிடுச்சே, யாரை ஆட்டைய போட்டு மத்யான சாப்பாடு வெளுத்துக் கட்டலாம் என்று யோசித்துக் கொண்டே டூ வீலரை எடுக்கிறார்….. 

ஸ்வீட் ஸ்டால் வைத்து இருக்கும் நண்பர் மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் வருகிறது….. அவர் நாலு நாள் கடைக்கு லீவு விட்டு விட்டார் என்று……


பெட்ரோல் இல்லாத வண்டியை தள்ளிக் கொண்டே தனக்கும், வண்டிக்கும் தீனி போட வேற யாரை ஆட்டைய போடலாம் என்று யோசித்துக் கொண்டே டேபிளார் தொந்தி குலுங்க ரோட்டில் நகர்கிறார்……..

Sunday, February 12, 2012


என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம் - 9




தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...
நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ள விஷயங்கள் படிக்க சுவாரசியமாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”பிருந்தாவனம்” - ஸ்ரீராகவேந்திரர் பற்றிய சரிதம் : தொடர்ச்சி.......
ஆசையின் உக்கிரத்தில்தான் பதட்டம் ஏற்படுகிறது... பதட்டம்தான் கோபத்தினுடைய ஆணிவேர்... கோபம் கிளைவிட்டுப் பரவினால், அந்த நச்சுச்செடி பிறந்த இடத்தையும் அழித்து சுற்றுப்புற சூழ்நிலையையும் நாசப்படுத்துகிறது... அந்த கோபத்தின் விளைவால் வஞ்சனை என்கின்ற இலைகளும், பொறாமை என்ற கனியும் விளையும்... பொறாமை என்ற கனியினுடைய நடுவில் விதையாய் பழிவாங்குதல் என்ற வெஞ்சினம் ஒளிந்திருக்கிறது... இந்தப் பழிவாங்குதல் மறுபடியும் நடப்பட்டால் மீண்டும் கோபம் என்கிற விஷயம்தான் கிளறும்... இவை அனைத்திற்கும் ஆசையே... ஆசை என்பதினுடைய ஆரம்பம் எது, நான் என்ற அகந்தை... எனக்கு என்கிற தன்மை... 

மனித வாழ்க்கை சோதனைகள் நிறைந்தது...  சோதனைகளை சந்திப்பதற்காகவே மனித வாழ்க்கை ஏற்பட்டிருக்கிறது... சோதனைகளை முற்றிலுமாய் ஈடுபட்டு, புடம் போடப்பட்டு, பொலிவாத மனிதன் கடைத்தேற வேண்டும் என்பது தான் கடவுளின் விருப்பம்... பிறப்பெனும் மாயையில் சிக்காமல், ஆசையென்னும் வலையில் அகப்படாமல், தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க சோதனைகள் உதவுகின்றன... இறைவனுக்கு அணிகலமாக மாற்றப்பட வேண்டுமென்றால் தங்கம் உருக்கப்படத்தான் வேண்டும்... தான் உடம்பு என்கிற நினைப்பில், தான் புத்தி என்கிற நினைப்பில் வெவ்வேறு விதமான உருவகங்களை தான் எனக்கொண்டு தடுமாறியிருக்கும் மனிதர்களை சோதனை நேரத்தில் தான் யார் என்று கேட்டுக்கொள்ள முயல்வார்கள்... உண்மையாக கேட்டுக்கொண்டு, உண்மையாக விடை தேடுபவனுக்கு வெகு நிச்சயம் சரியான விடை கிடைக்கும்..

கண்மூடி அமர்ந்திருந்து தன் சலனங்களைத் தானே உற்றுப்பார்த்து தானும் தன் சலனங்களும் ஒன்றே என்ற முடிவுக்கு ஒரு மனிதன் வருவதற்கு தவம் என்று பெயர்... சோதனைகளும் தவம் போல தான்... எனக்கு ஏன் இந்த துன்பம் ஏற்பட்ட்து, எவரால் ஏற்பட்டது, இந்தத் துன்பத்திற்குக் காரணம் நானா, வேறெவருமா என்று யோசித்து, நான் யார் என்ற இடத்திற்கு ஒரு மனிதன் நகருவான் என்பதால் தான் சோதனைகள் மனித வாழ்க்கையில் தரப்படுகின்றன... தன்னை அறிந்தவனுக்கு மரணம் இல்லை... மரணமில்லாப் பெருவாழ்வு என்பதை உடம்போடு வெகுநாள் வாழ்வதைச் சொல்லவில்லை... மறுபடியும் பிறவாத நிலையையே மரணமில்லா பெருவாழ்வு என்று சொல்கிறார்கள்...

ஆசையை அகற்றியவர், தெளிவும் உள்ளவர், எங்கும் பரவிய கடவுளின் தன்மையை தன்னுள் உணர்ந்தவர் மறுபடியும் பிறக்க மாட்டார்... பிறப்பு இல்லையெனில் இறப்பும் இல்லை...

உண்மையிலேயே உருமாற வேண்டும்... உண்மையிலேயே கடைத்தேற வேண்டும், உண்மையிலேயே இந்த மாயையிலிருந்து விலகி இறைவன் பாதம் நோக்கி நகர்ந்து விட வேண்டுமென்ற திடமான ஆசை உடையவர்கள் ஞானியை உறவாக மாற்றிக் கொள்வார்கள்....

ஒரு ஞானியை குருவாக அடைதல், தாய் தந்தையருக்கு இணையான உறவு குரு... தெய்வத்திற்கு இணையான இடம் குரு... தெய்வம் கோபித்துக் கொண்டால், குரு காப்பாற்றுவார்... குரு கோபித்துக் கொண்டால் தெய்வமும் காப்பாற்றாது..

ஆசை இல்லாதவர்க்கு வெகு அருகே சத்தியம் இருக்கிறது... சத்திய சொரூபமாக இருப்பவன் தான் ஆசைகளை முற்றிலும் அகற்ற முடியும்....

பணிவோடு பேசினால் எதிர்ப்பக்கத்திலிருந்து பணிவான பதில் வரும்... அகங்காரமாக பேசினால், அகங்காரத்திற்கு அகங்காரம் தான் பதிலாக கிடைக்கும்....

மனம் ஒரு அற்புதமான கருவி... மகான்களிடம் இந்தக் கருவி கூர்மையாகவும், செம்மையாகவும் இருக்கிறது... இந்த கருவியில் செய்ய இயலாத காரியங்களையெல்லாம் செய்ய முடியும்...
இறையை அறிந்தவர்க்கு தான் என்ற கர்வம் ஒருக்காலும் வராது... ஏனெனில் அவருடைய கைகள் இறைவனுடைய கைகள்... அவருடைய மனம் இறைவனுடைய சக்தியில் தோய்ந்திருக்கின்ற மனம்... அவருடைய மனம் என்னும் கருவி தூய்மையாகவும், தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறது... எனவே, எதையும் புரட்டிப் போடப்படும்... இயலாத்து என்று எதுவும் சொல்லப்பட மாட்டாது..
பிரபஞ்ச சக்தியின் ஒரு திவலை தான் பிராணசக்தி... அந்த பிராணசக்தி சலனமடைந்து உடல் எடுக்கிறது... உடல் எடுத்து வாழ்ந்த பிராணசக்தி உடலை விட்டுவிட்டு மறுபடியும் பிரபஞ்ச சக்தியிடம் போவதே வழக்கமாக வைத்திருக்கிறது...

மகான்களுக்கு எல்லாரும் ஒன்று... எல்லா உயிர்களும் ஒன்று... உயர்வு, தாழ்வு இல்லாத ஒரு பார்வை மகான்களிடம் இயல்பாய் பிறந்திருக்கிறது... தன்னை அண்டி தனக்கு தொண்டு செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல் தன்னைப் பற்றிக் கேலியாகவும், தூஷணையாகவும் பேசுகிறவர்களையும் கூட மகான்கள் அன்பாகவும், ஆதரவாகவும் நடத்துகிறார்கள்.... அவர்களையும் ஆசிர்வதிக்கிறார்கள்... அவர்களுக்கும் அருட்பிரசாதங்கள் கிடைக்கின்றன...

படிப்பு பக்குவமானதாய் உள்ளே போகாவிட்டால் கர்வம் கொடுக்கும்... படிப்பு என்ற நெல்லிக்கனியை அனுபவரசத்தில் ஊற வைக்கா விட்டால் அது ருசி கெட்டுப் போய் சுள்ளென்று பல்கூசப் புளிக்கும்... தொண்டையை பிடிக்கும்... தேனில் ஏறிய நெல்லிக்கனி போல சுகமாக தொண்டைக்குள் இறங்காது. இந்தப்படிப்பு வெறும் புளித்த நெல்லிக்கனி...

அதிகம் பேசுபவர்கள் அதிகம் செய்திகளை அறிந்திருப்பவர்களாக இருப்பார்களே தவிர, அனுபவத்தில் திளைத்தவர்களாக இருக்க மாட்டார்கள்...

சில கால கட்டங்களில் மனிதருக்கு புத்தி கோணலாகி விடுகிறது... இறையை சோதித்து பார்ப்பது என்பது இயல்பாகி விடுகிறது..

நாம் எல்லோரும் இணைக்கப்பட்டிருக்கிறோம்... இந்த பூமியிலுள்ள அத்தனை உயிரினங்களும், பிரபஞ்ச சக்தியோடு இணைக்கப்பட்டிருக்கிறது... இங்கு தனியாக எந்தத் துணையும் இல்லாமல் இருப்பதென்பது எதுவுமில்லை... ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உயிரையும் பின்னிப் பிணைந்து கொண்டுதான் இருக்கிறது... பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு கொண்டுதான் இருக்கிறது.... இந்த தொடர்பைப் புறக்கணிக்கிறபோது, பிரபஞ்ச சக்தி உங்களை கைவிட்டு விடுகிறது... நாம் பின்னிப் பிணைந்து கொண்டிருக்கிறோம்.... அதை உறுதிப்படுத்திக் கொள்ள, இங்கு என்ன வேண்டுமோ அதை உடனடியாக அனுப்புகிறது...

ஹோமத்தால் எரிகின்ற தீயும், பொருட்களும் மழையை வரவழைக்கவில்லை... போட்டவிதம் வரவழைக்க வைத்தது... நம் மனம் ஒன்று கூடி இறைவனை இறைஞ்ச, அந்த மனதின் சக்தி இந்த ஹோமத்தீயின் வழியாக பிரபஞ்ச சக்தியைத் தொட்டு பஞ்ச சக்தி நெகிழ்ந்து, இங்கு உங்கள் தேவைகளை உடனே நிறைவேற்றுகிறது... இந்த தொடர்பு எந்நாளும் அறக்கூடாது...

நீங்கள் பிரபஞ்சத் தொடர்பை அறுத்துவிட்டு நகர்ந்தீர்கள் என்றால் பிரபஞ்சமும் நகர்ந்து விடுகிறது... பிரபஞ்ச சக்தியின் அண்மை இல்லையெனில், இந்த பூமி இல்லை... பூமியிலுள்ள உயிர்கள் இல்லை... எனவே, இடையறாது, சகலரோடும் நல்லவிதமாகத் தொடர்பு கொள்ளலே வாழ்க்கை....

தேவர்கள் அக்னிமயமானவர்கள்... அவர்களுக்கு அக்னியால் தான் உபசாரம்... அதன் வழியாகத்தான் உணவு... அதாவது நைவேத்யம்... பித்ருக்கள் ஜலமயமானவர்கள்... அவர்களுக்கு ஜலம் வழியாகத்தான் உபசாரம்... ஜலத்தின் வழியாகத்தான் பிண்டம்... மனிதர்கள் மண் மயமானவர்கள்... அவர்களுக்கு உணவு, மண்ணில் விளையும் பொருட்கள்தான் ஆகாரமாகவும், உணவாக மாறுபவையாகவும் இருக்கின்றன....
எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுகின்ற வேலையற்ற வீணர்கள் இருப்பார்கள்... அவர்கள் தான் பிரிவு, பேதம் காட்டுவார்கள்... தான் மிகச் சிறந்த மதவாதி என்று காட்டிக் கொள்ள மற்ற மதத்தை தண்டிப்பது ஒரு சாதாரண தந்திரம்... தன் மதக் கொள்கைகளைப் புரிந்து கொண்டு அதற்குள் மூழ்குதலைவிட எதிராளியைக் குறை சொன்னால்தான் நான் மிகச் சிறந்த மதவாதியாகத் தோற்றமளிக்க்க்கூடும் என்று சொல்லப்படும் ஒரு யுக்தி... இந்தத் தந்திரசாலிகள்தான் மதபேதங்களையும், கடவுள் பேதங்களையும் ஏற்படுத்துகிறவர்கள்...

(இன்னமும் வரும்.......)

Friday, January 27, 2012

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம் - 8



தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ள விஷயங்கள் படிக்க சுவாரசியமாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”பிருந்தாவனம்” - ஸ்ரீராகவேந்திரர் பற்றிய சரிதம் : தொடர்ச்சி.......

பானை செய்தவன் குயவன் என்பதையும், நாற்காலி செய்தவன் தச்சன் என்பதையும் நாம் மறுத்ததுண்டோ...?
இல்லை... ஆனால் கடவுளை மறக்கவோ, அல்லது வேறு ரூப குணாதிசயங்கள் சொல்லவோ முற்படுகிறோம்... இதற்கு காரணம் நம்முடைய அறியாமை... அவன் யார் என்று தெரியாமல் வெறும் அனுமானத்தை வைத்துக்கொண்டு அங்கே நெருப்பு வருகிறாது என்று புகைக்கூண்டு சொல்வது போல நாம் கடவுள் இருக்க்கூடும் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

கடவுளை தரிசித்த ஆன்றோர்களின் வாய்மொழி, நான் பார்த்திருக்கிறேன் என்று அவர்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லுகின்ற வாக்கியம் நமக்கு உதவி செய்யும்...

கடவுள் தேடுவதை இங்கு வாழும் நல்லவர்கள் விசாரித்துக் கொண்டுதான் இருப்பார்கள்... இது என்ன, இது என்ன என்று தவித்துக் கொண்டுதான் இருப்பார்கள்... ஜன சமூகத்தில் ஒரு பெரிய பகுதி, கேளிக்கைக் களியாட்டங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, ஒரு சிறிய பகுதி எல்லா கால கட்டத்திலும் இடையறாது கடவுளை நோக்கி தன் குரலை எழுப்பிக் கொண்டிருக்கும். தன் பார்வையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் என்று தெரிந்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக பல மகாவாக்கியங்களை கடவுளைக் கண்டபோது ஏற்பட்ட சிலிர்ப்பை வசனமாக, எல்லோரும் சொல்லி வைத்தார்கள்... சுருக்கமாக, அழுத்தமாக, நிறைவாக அந்த வாக்கியங்கள் இருந்தன... அந்த வாக்கியங்களை தொகுத்து நான்கு வேதங்களை நமது முன்னோர்கள் வைத்தார்கள்...

வேதம் என்பது ஒருவர் படைப்பல்ல... ஒருவரால் செய்யப்பட்ட நூல் அல்ல.. அதை யார் சொன்னார்கள் என்பது முக்கியமல்ல... அந்த வாக்கியங்கள் சொன்ன பல மகான்களின் பெயரும், ஊரும், வாழ்வும் நமக்கு தெரியாது... தெரிய வேண்டிய அவசியமும் இல்லை... அந்த வாக்கியம் தான் முக்கியமே தவிர, அந்த வாக்கியக்கார்ர் முக்கியமில்லை... கரண்டியிலிருந்து எடுக்கப்பட்ட பாயசம் தான் முக்கியமே தவிர, கரண்டி முக்கியமில்லை... அந்த பாயசத்தை கரண்டி தாங்கிக் கொண்டிருக்கிறது... நம் கைகளில் பாயசம் ஊற்றப்படுகிறது.. நாம் உறிஞ்சி குடித்து அதன் சுவையை அனுபவிக்கிறோம்... அந்த கரண்டி எங்கிருந்து வந்த்து, யார் செய்தது, என்ன உலோகம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோமா? இல்லை, வேண்டுமானால், இன்னொரு கை பாயசம் ஊற்று என்று கேட்போமே தவிர பாயசத்தை தாங்கிக் கொண்டிருக்கிற, பாயசத்தை நமக்கு எடுத்து வழங்கிய கரண்டியை நாம் கண்டு கொள்வதில்லை... காலம், கடவுளை அனுபவித்தவர்களை மெல்ல உதிர்த்துவிட்டு, அவர்களுடைய அனுபவத்தை மிகப்பெரிய பழமாக நம் கைகளிலே கொண்டு வந்து கொடுக்கிறது.. அதுவொரு அனுபவம்... அதுவொரு வழி... அதுவொரு அறிமுகம், அதுவொரு கண்டுபிடிப்பு, ஒரு வினாவுக்குண்டான உண்மையான விடை... சத்தியம், அது நிரந்தரம்... வேதத்திற்கு அழிவே இல்லை... அழிக்கவே முடியாத விஷயம் அது.. நெல்முனையளவும் கூட்டலோ, குறைத்தலோ இல்லாமல் மிக சத்தியமாக கடவுள் அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்கின்ற முயற்சி அது... ஞானத்தின் வாசல்... மனித அறிவில் கடைந்தெடுக்கப்பட்ட திரண்ட வெண்ணெய்... அமிர்த கலசம்...

தேடுவது என்பது என்ன? தேடப்படும் பொருள் என்று ஒன்று இருந்தால் தானே தேடுபவர் இருக்க முடியும்... அப்பொழுது தான் தேடுவது என்பது செய்கையாக முடியும்... தேடப்படும் பொருள், தேடுபவர், தேடுவது என்கிற செய்கை என்று மூன்று விஷயமாக இது பிரிகிறது...

இறைவனால் படைக்கப்பட்டது இவ்வுலகம் என்றால் இந்த உலகம் எப்படி மாயையாக இருக்க முடியும்... மயக்கத்தை தருபவனா இறைவன்... அசத்தியமான ஒரு விஷயத்தைக் காட்டுபவனா இறைவன்? இல்லையே... இறைவன் சத்தியமெனில், இறைவனால் படைக்கப்பட்ட இந்த உலகமும் சத்தியம்... இருப்பதை இல்லையென்று சொல்வதில் என்ன பயன், எதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்?
நீங்கள் இடையறாது பக்தி செய்து வாருங்கள்... இடையறாது பூஜை செய்து வாருங்கள்... இடையறாது கடவுள் நாமத்தை சொல்லி வாருங்கள்... ஏதோ ஒரு கணம், ஏதோ ஒரு சோதனையில் உங்கள் மனம் கனிந்து பக்குவப்பட்டு விடும்.. பக்தியில்லாது இந்த பக்குவம் வராது... எனவே, பக்தி முக்கியம்... எதற்கு பக்தி என்றால்,  நீங்கள் கனிந்து இறைவன் காலடியில் இருப்பதற்கு... இறைவன் ஆவதற்கு அல்ல...
நல்லவர்கள் தங்கள் செயலை நானே செய்தேன் என்கிற கர்வத்தோடு ஒரு போதும் செய்வதில்லை.. என்னால் முடியாததா, என்னுடைய அதிகாரம் எவ்வளவு தெரியுமா, என் சாமர்த்தியம் எப்படி தெரியுமா என்று கொக்கரித்து தன்னுடைய காரியங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை... மாறாக, என் செயலில் தன்னுடைய இறையனுபவமும், இறையின் கருணையும் படர்ந்திருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்...
குரு என்பவர் யார்?

தெய்வத்திற்கும் மேலானவர்... தெய்வம் கோபித்துக் கொண்டால், குரு உன்னை காப்பாற்றுவார்... ஆனால், குரு கோபித்துக் கொண்டால், தெய்வமும் காப்பாற்றாது...

ஒரு கண்டத்திற்கு தேவையென்றால் ஒரு தேசத்தை பலி கொடுக்கலாம்... ஒரு தேசத்திற்கு தேவையென்றால் ஒரு ஊரை பலி கொடுக்கலாம்ஒரு ஊருக்கு நல்லதென்றால் ஒரு கிராமத்தை பலி கொடுக்கலாம்ஒரு கிராமத்திற்கு சிறப்பு என்றால் ஒரு வீட்டை பலி கொடுக்கலாம்ஒரு வீட்டிற்கு நல்லதென்றால் அதில் ஒருவர் பலியாகலாம் தவறில்லைதியாகத்தின் மூலம் தான் திடமான, வலிமையான சமுதாயம் ஏற்படுகிறதுஏனோ தானோ என்று எந்த சமுதாயமும் வளரவில்லை.. அந்த சமுதாயம் வளர வளர பல பெரியோர்கள் தோன்றியிருக்கிறார்கள்அந்த பெரியோரின் சொந்த வாழ்க்கை முழுதுமாக சுகங்களை நாடியில்லாமல் சமுதாயத்தின் மேன்மையையே நாடி இருக்கிறது
புத்தியால் எடுக்கப்படுகின்ற எல்லா முடிவுகளும் இரட்டையானவைஇடதும், வலதும் அலைபவைஇது நல்லது என்று சமயமும், இல்லை அதுவே நல்லது என்று மறுசமயமும் புத்தி ஆட்டம் காட்டிக்கொண்டு தான் இருக்கும்….

மௌனத்திலிருந்து தான் சப்தம் பிறக்கிறதுசப்தத்தின் முடிவு மௌனம்….
மகத்தான காரியங்கள் செய்யும் போது சில வேடங்கள் அணிந்து தான் ஆக வேண்டும்சில நியமனங்களை கடைப்பிடித்துத்தான் ஆக வேண்டும்
துறவு என்றால் என்ன?

துறவு என்றால் பணம், காசு, சௌகரியங்களை துறப்பது அல்ல... அகந்தையை துறப்பது... அகந்தையை ஒருவர் குடும்பத்திலிருந்து கொண்டு துறப்பது முடியாத காரியம்... குடும்பம் என்று இருப்பதாலேயே ஏற்படும் அகந்தையைத் துறக்கவே முடியாது... எனவே, அகந்தையை துறக்க, குடும்பத்தை துறப்பதும் முக்கியமாக கருதப்படுகிறது....

தான் என்ற அகங்காரம் கொண்டவர்கள் தான் தன் அகந்தையை அழிக்க முடியாமல் தன் உடம்பை அழித்துக் கொள்வார்கள்....
இங்கு வருவதும், போவதும் இயற்கை... பிறப்பும், இறப்பும் சகஜம்... எப்போது பிறப்பு, எப்போது இறப்பு என்று எவருக்கும் தெரியாது... இது தான் வாழ்க்கையின் சூட்சுமம்.... ரகசியம்.. எனவே, நல்லதிற்கும், கெட்டதிற்கும் மனிதர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.. வருவாய்க்கும், இழப்புக்கும் ஒருவர் மனம் திறந்து தயாராக இருக்க வேண்டும்... இழப்புக்கு வருத்தப்படுபவர்கள் ஏதேனும் கிடைத்தால் அதிகம் ஆடுவார்கள்... வருவாய்க்கு அதிகம் ஆடுபவர்கள் தான் இழப்புக்கும் அதிகம் அலறுவார்கள்...

(இன்னமும் வரும்............)

Friday, January 6, 2012

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-7


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ள விஷயங்கள் படிக்க சுவாரசியமாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”பிருந்தாவனம்” - ஸ்ரீராகவேந்திரர் பற்றிய சரிதம் : தொடர்ச்சி.......

தன்னை அறியும் போது தான் செயல் மீது பிடிப்பு இல்லாமல் போகிறது... அப்பொழுது தான் எந்த செயலையும் தீவிரமாகவும், முழுமையாகவும், வேகமாகவும் செய்ய முடிகிறது.

அமைதியாக வீணை வாசிப்பது மிகக் கடினமான காரியம்... இடையறாக பயிற்சி, அந்தப் பயிற்சிக்குத் தேவை தனிமை... கடும் தனிமையிலிருந்து பயிற்சி செய்து தன்னை ஒரு பக்குவப்படுத்திக் கொள்ள பல வருடங்கள் தேவைப்படுகின்றன....

கடவுள் தேடல் மிக மிக கடினம்ஜென்ம ஜென்மமாய் பாடுபட்டால் தான் அது ஏதேனும் ஒரு ஜென்மத்தில் ஈடேறும்முயற்சி பலிதமாகும்

கடவுள் தேடல் என்பது தன்னை அறிதல்.. தன்னை அறிதல் என்கிற விஷயத்தில் ஏகப்பட்ட மாயைகள் இருக்கின்றன.. அந்த மாயைகளை அகற்ற மிகக் கடுமையான ஒரு தனிமை தேவைப்படுகிறது

ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது போல் சந்தோஷம் உலகத்தில் வேறு எதுவுமில்லை.. தன்னைப் போலவே ஒரு வாரிசு உருவாக்கல்வம்சவிருத்தி, தன் சாயலிலேயே ஒரு பிரதிமையை விட்டுப்போதல் என்கிற ஆனந்தங்கள் இருப்பினும் தன்னுடைய எதிர்காலத்திற்கு தனக்கு தள்ளாத வயது வந்த போது, தான் பலகீனப்பட்டு தடுமாறுகிற போது, தன் புத்தி பலம் இழக்கிறபோது, தன்னை தேற்றுக் காப்பாற்றி, ஆறுதல் சொல்லி, தன்னை அமைதியாக மரணத்தின் நேரத்தில் இருப்பதற்கு ஒரு மனிதனை இந்த பூமியில் கொண்டு வருவதே குழந்தைப் பெறுதலின் மிக அடிப்படையான நோக்கம்..…

தன் வாலிபத்தில் தன்னைச் சுற்றியிருந்த எவரும் தன் வயோதிகத்தில் உதவி செய்ய மாட்டான்தன் வயோதிகத்தில் உதவி செய்வதற்கு தன்னுடைய வாரிசுகள் தான் உதவும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருக்கிறதுகுடும்பம் என்ற விஷயம் தோன்றுவதற்கும், இந்த வயோதிகத்தின் போது காப்பாற்றுதல் என்பது தான் காரணம்.. எனவே வெறுமே பெற்றெடுத்தல் என்கிற விஷயமில்லாத, தான் பெற்றதைப் பேணிக்காப்பது என்கிற விஷயத்தையும் மனிதன் பொறுப்பேற்று கொள்கிறான்.. தன்னை விட ஞானஸ்தனாக, வலிவுள்ளவனாக, செல்வந்தனாக, சிறப்பு மிக்கவனாக அந்த குழந்தை இருக்க வேண்டும் என்று பெற்றவன் ஆசைப்படுகிறான்

மகளின் திருமணம் முடிந்தவுடனேயே பல வயோதிகர்களுக்கு மிகப்பெரிய நிம்மதி ஏற்பட்டு விடுகிறது.. போதும் வாழ்க்கை என்று தோன்றி விடுகிறது... மகள் நன்றாக குடித்தனம் செய்கிறாள் என்பது தெரியவர, அவர் மனம் இன்னமும் விடுதலை அடைகிறது...

உண்மையாய் இருக்கிற எந்த சீடனை பார்த்தாலும் குருவுக்கு மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட்டு விடும்..

ஒரு விஷயத்தை எப்போது கற்றுக் கொள்கிறோமோ, அதனுடைய ஆணிவேர் வரை ஆராய்வது தான், அதை நன்கு புரிந்துக் கொண்டேன் என்று விளக்கி ஊருக்கு சொல்வது தான் உண்மையான படிப்பு..

கடும் உழைப்பு என்றும் பாராட்டப்படாமல் போனதில்லை...

குரு சிஷ்யனிடம் சொல்வது : எனக்கு சொல்லிக் கொடுத்த குருவுக்கு என்ன சன்மானம் வழங்குவது என்று திகைக்கிறாயா? சீடனே... உன் படிப்பு தான், உன்னுடைய படிப்பில் காட்டும் அக்கறை தான், அதில் ஏற்படும் தெளிவு தான் எனக்கு சன்மானம்...

இலவசமாக கொடுக்கும் படிப்பு இளக்காரமாக போகாதா?

ஆஹா... அது கற்றுக் கொள்பவர் புத்தி... இலவசமாகவே கிடைத்தது என்பதாலேயே காற்றும், மழையும், மரமும் இருக்காது போய் விடுமோ? சுவாசிக்காமல் நிறுத்தி விடுவோமா? தண்ணீர் குடிக்காமல் புறக்கணிப்போமா? மரத்தில் பழுக்கின்ற பழத்தை உண்ணாமல் ஒதுக்கி விடுவோமா? இதென்ன பேச்சு... கடவுள் அளித்த பல கொடைகளில் கல்வியும் ஒன்று... அது இலவசமாக தான் தரப்பட வேண்டும்... இலவசமாய் கிடைத்ததை யாரேனும் இளக்காரமாக நினைத்தாலும் நினைத்து விட்டு போகட்டும்... கல்வியை விற்பது என்று யார் முடிவு செய்தாலும், அது விற்பவருக்கு தான் இழிவு...

சித்தத்தில் தெளிவும், வாழ்க்கையில் நேர்மையும், சத்தியமும் கொண்டவர்களுக்கு வறுமை ஒரு முக்கியமான விஷயமல்ல... அவர் கொண்டுள்ள சத்தியம் அவரை எப்போதும் காக்கும்..

எங்கு உண்மையான அன்பு இருக்கிறதோ, அங்கு சரியான அக்கறையும் இருக்கும்... அன்பும், அக்கறையும் இணை பிரியாதவை... நாம் அக்கறை காட்டி பிறரிடமிருந்து அன்பு பெருக்கெடுத்து ஓடிவரும்...

எந்த ஒரு தேசத்தில் தலைவன் தறிகெட்டு ஆடுகிறானோ, அவனால் அந்த தேசமும், அந்த தேசத்து மக்களும் மிகப்பெரிய துயரை அனுபவிப்பார்கள்.. கடவுள் மீது நம்பிக்கை இல்லாது ஒரு தலைவன் தோன்றினால் அவன் தான்தோன்றியாகத்தான் செயல்படுவான்.. தனக்கு தெரியும் என்று யோசிக்கிற தலைவன் ஆபத்தானவன்.. எல்லாமும் எல்லாருக்கும் தெரிந்திருக்காது... என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்கால திட்டங்களை அடுத்தவரோடு ஆராய்ச்சி செய்கிற தலைவனே அமைதியானவன்.. அவனே ஆரோக்கியமானவன்.. கடவுளையே இழிவுபடுத்துகிறவன், தனக்கு மீறி உள்ள சக்தியையே அலட்சியம் செய்கிறவன், கற்றவர்களை, மற்றவர்களை வெகு எளிதாக இழிவு செய்வான்...

கடவுளின் மீது அசைக்க முடியாத பிடிப்பு ஏற்பட்டால், தர்மத்தின் மீது பிடிப்பு ஏற்பதும்... தர்மத்தின் மீது பிடிப்பு ஏற்பட்டால், தினசரி வாழ்சில் ஒழுக்கம் ஏற்படும்... தினசரி வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டால், உள்ளுக்குள் அமைதி பொங்கும்... உள்ளுக்குள் அமைதி பொங்கினால், மற்றவரைப்பற்றி அறிவதும், தெளிவதும், மிகச் சிறப்பாக இருக்கும்... எல்லாம் எனக்கு தெரியும் என்கிற கர்வம் மிக்க நாத்திகம் எங்கு பரவுகிறதோ, அங்கு தினசரி வாழ்க்கை சீராக இராது....

கடவுள் என்கிற தன்னை மீறிய ஒரு சக்தியின் மீது எவருக்கு நம்பிக்கை இல்லையோ, நம்பிக்கையற்றவர் நாத்திகம் பேசியோ அல்லது ஆத்திகம் பேசுவது போல் நடித்தோ அழிவு செய்வார்கள்... கடவுள் மீது நம்பிக்கை உள்ளவருக்கு தர்மத்தின் மீது பிடிப்பு ஏற்படும்...இப்படி வைத்துக் கொள்ளுங்கள்... யார் தர்மமாக இல்லையோ அவர்கள் கடவுளைப்பற்றி நம்பவில்லை, அலட்சியமாக இருக்கிறார்கள்...

பானை என்று ஒன்று இருந்தால், குயவன் என்று ஒருவன் இருந்திருக்க வேண்டும்... மரத்தாலான ஆசனம் என்று ஒன்று இருந்தால், அதைச் செய்த தச்சன் ஒருவன் இருக்க வேணுமே... அது போல, உலகம் என்று ஒன்று இருந்தால், அதைப் படைத்தவனும் இருக்கத்தானே வேண்டும்.. உலகத்து ஜீவராசிகளான நாம் அந்த படைத்தவரை நோக்கி வணங்குவது தானே முறை.. இயல்பு,.. அது தானே மரியாதை... நமக்கு தச்சனை தெரியும், குயவனை தெரியும்...பார்த்திருக்கிறோம்... அதே போல் கடவுள் என்பதை நாம் பார்க்க ஆசைப்படுகிறோம்.. பார்க்க முடியவில்லை, எனவேதான், அது பற்றிய சந்தேகம் வருகிறது...

பானை செய்யும் குயவன், அதே போல் உலகத்தைப் படைத்த கடவுள் என்று ஒரு அனுமானம்.. அதாவது புகை எப்படி வருகிறது... நெருப்பு என்று இருந்தால் தானே புகை எழுகிறது. ஆகவே, வெகு நிச்சயமாக கடவுள் என்பவர் உண்டு... எங்கே, என்ன ரூபத்தில் என்றுதான் தெரியவில்லை.

குயவனையும், தச்சனையும் அறிமுகமாக்கிக் கொண்டது போல், நமக்கு காணக் கிடைத்தது போல கடவுள் என்பது காணக் கிடைக்கவில்லை... இது எல்லோர் கண்ணுக்கும் தெரியவில்லை... அதனால் தான் இது பற்றிய சர்ச்சைகளும், விவாதங்களும், இந்த விவாதங்களின் தொடர்பாக மதமும் கிளர்ந்திருக்கின்றன...

பானை செய்தவன் குயவன் என்பதையும், நாற்காலி செய்தவன் தச்சன் என்பதையும் நாம் மறுத்ததுண்டோ...?

(இன்னமும் வரும்...........)

Saturday, December 24, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-6


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”பிருந்தாவனம்” - ஸ்ரீராகவேந்திரர் பற்றிய சரிதம் :

எது அறியப்பட முடியாதோ அதுவே நீ… எது அறிவினால் பகுத்தறிய முடியாதோ அதுவே நீ… எது எந்த செயலுமற்று வெறுமே உள்ளேயிருக்கிறதோ அதுவே நீ… எதற்குள் எந்த செயலுமற்று ஒரு விஷயம் இருக்கிறதோ அதுவே நீ… எல்லா உயிரினங்களிலும் இருப்பது எதுவோ அதுவே நீ…. இந்த பிரபஞ்சம் முழுவதையும் எது ஆக்ரமித்து கொண்டிருக்கிறாதோ அதுவே நீ…

நீ உடம்பல்ல… நீ மனமல்ல.. நீ புத்தியல்ல.. நீ பிரபஞ்ச சக்தி.. உன்னுள் இருப்பது எல்லாவற்றிலும் இருக்கிறது… யானையில், பூனையில், நாயில், எருமையில் எல்லாவற்றிலும் உன்னிலிருப்பதே இருக்கிறது…

தொடர்ச்சியாக நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கும்… காரணமின்றி காரியமில்லை… காரியம்தான் கண்ணுக்கு பட்டு மனதிற்கு சஞ்சலங்கள் தருகின்றனவே தவிர, துக்கமும், மகிழ்ச்சியும் மாறி மாறி தருகின்றனவே தவிர, காரணம் பார்க்க சாதாரண மனிதனால் முடிவதில்லை… ஒவ்வொரு தெய்வீகப் பிறப்பிற்கு பின்னாலும் மிகச் சரியான ஒரு காரணம் இருக்கிறது…

உலகத்து மக்களுக்கு உதவி செய்தல், நல்லார்களுக்கு வழிகாட்ட, தீயவர்களை விலக்கி வைக்க இறை என்கிற சக்தி இடையறாது உத்தமர்களை உலகிற்கு அளித்துக் கொண்டிருக்கிறது…

தனக்கு பின்னே ஒரு கூட்டம் கூடினால், தன்னை வாழ்க என்று வாழ்த்தினால் உடனே அவனுக்கு அடுத்தவர்களை அழவைக்கிற எண்ணம் வந்து விடுகிறது… நாம் எல்லாம் ஒன்று என்று சொல்வதற்காக, யார் வேறு என்று தேடும் புத்தி வந்து விடுகிறது…

தன்னுடைய கூட்டத்தை ஒன்றுபடுத்திக் கொள்வதற்காக எதிரியை கைகாட்ட வேண்டியிருக்கிறது… இவர்கள் மிக மோசமானவர்கள், இவர்களை அழித்து விடுங்கள் என்று நல்லவர்களை கை காட்ட அராஜகம் மிகுந்த அந்த அயோக்கியர்கள் வெறியோடு அவர்கள் மீது பாய, அப்போது கிடைத்த அல்பமான வெற்றிகளால் அவர்கள் இரும்பூ தெய்தினார்கள்…

இது இன்று வரைக்கும் நடக்கின்ற விஷயம்… தன்னுடைய வெற்றி, தன்னுடைய இருப்பு, தன்னுடைய வாழ்க்கை தன்னால் ஏற்பட்டதல்ல… அது விதியின் வசம்… விதி இறைவன் வசம் என்று புரியாத போது எல்லோரும் தடுமாறத் துவங்கி விடுகிறார்கள்…

திறந்து வைக்கப்படாத இதயம், என்ன என்று கேள்வி கேட்டுக் கொள்ளாத மனம் அழுகத் தொடங்கி விடும்… உள்ளிருந்து துர்நாற்றமும், துர்புத்தியும் தான் வெளியே வரும்… மூடிக்கிடந்த அறையிலிருந்து வெப்பமும், துர்நாற்றமும் வெளியே வருவது போல, மூடி விட்ட மனதிலிருந்து கோபமும், பொறாமைகளும் தான் உச்சமாக இருக்கும்…

எங்கும் எதுவோ இருந்தால் தானே இங்கே இயக்கம் என்பது சாத்தியமாகிறது… இங்கே எதுவும் இல்லாமல் இருந்தால், இயக்கம் சாத்தியமாகுமா?

மண் தான் தசை… நீர் தான் இரத்தம்… நெருப்பு தான் வயிற்று அமிலம்.. காற்று தான் மூச்சு. ஆகாயம் தான் இருதயத்திற்கு நடுவே இருக்கின்ற வெளி… அந்த ஆகாயத்தில் வெளி இருப்பதால் தான் ஹிருதயம் இயங்குகிறது… வெற்றிடம் இருப்பதால் தான் இரத்தம் உள்ளே பாய்கிறது… அது உள்ளே பாய்வதால் தான் இருதயம் விரிகிறாது… மறுபடியும் வெற்றிடம் ஏற்பட, மறுபடியும் இரத்தம் பாய்கிறது.

இறை உன்னிலும் மிகப் பெரியது… இறை உன்னிலும் மிக புத்திசாலியானது… இறை உன்னிலும் வலிமை மிக்கது… இறை உன்னிலும் எல்லாம் ஆற்றலும் கொண்ட்து… உன்னை அழிக்க வேறொரு இடத்தில் எதிரியைத் தோன்ற வைக்காமல் உன்னை அழிப்பதற்கு உன்னிலேயே ஒரு எதிரியை ஏற்படுத்தி விடுகிறது….

நாம் மரத்தின் ஒரு கிளை.. ஒரு சிறிய அங்கம்… வேர் கீழே மறைந்து கிடக்கிறது… என்னால் தான் மரம் இத்தனை அழகாக, வலுவாக இருக்கிறது என்று ஒரு கிளை சலசலத்தால், அதை யார் ஏற்றுக்கொள்வார்கள்…??

பயமுள்ளவன் எதைக்கண்டும் மிரளுவான்... எப்பொழுதும் மிரளுவான்... இடையறாக மிரட்சி தான் பயமுள்ளவர்களுக்கு இருக்கும்...

மனம் தான் வலியையும், வார்த்தையையும், வசதியையும் அனுபவிக்கிறது.. மனம் தான் நல்லதையும், கெட்டதையும் பிரித்துப் பார்த்து வேதனைப்படுகிறது... அதனால் தான் மனதை மாயை என்று சொல்கிறார்கள்... மனம் தான் தித்திப்பை சுகமென்றும், கசப்பை விஷமென்றும் பிரித்து வைத்துக் கொள்கிறது...

ஆனால், மனம் நினைத்தால் கசப்பைக் கூட சப்புக் கொட்டி சாப்பிடும்...

மனம் முழுவதும் இறை நிரம்பியிருப்பின், உடம்பினுடைய பாதகங்கள் பெரிதாகத் தெரியவே தெரியாது...

வந்து சேர்ந்த இடம் எத்தனை வளமானதாக இருந்தாலும், வாய்ப்பு வசதிகள் மிகுந்திருந்தாலும், பாதுகாப்பு பலமாக இருந்தாலும், சொந்த ஊரின் சுகம் ஒரு போதும் வரது... மனம், பிறந்து வளர்ந்த இடத்திற்குப் போக வேண்டி மிகவும் ஏங்கும்....

எலியை பூனை விரட்டினால், பூனையை நாய் விரட்டும்... அந்த நாயை எஜமானன் அடிப்பான்... இது விதி... எங்கும் இங்கு நிரந்தரமல்ல...

கடவுளை அறிவது எளிதல்ல... அதற்கு முயற்சி செய்வதே வாழ்க்கை என்று திரும்பத் திரும்ப சொல்லியாக வேண்டும்...

வாழ்க்கை என்பது ஆடலும், பாடலுமாகப் போய் விட்டது… உள்ளுக்குள்ளே ஆழ்ந்து அமிழ்ந்திருக்க, தனித்திருக்க, வெறுமே கிடக்க கடவுளை உணரும் முயற்சியில் ஈடுபடவேயில்லை.. இடையறாது குதித்துக் குதித்து கோலாட்டம் ஆடிக் கொண்டிருந்தால் என்ன வரும், கடும் பசி ஏற்படும்…. கடும் பசி ஏற்பட்டால் நிரம்ப தின்னத் தோன்றும்.. நிரம்பத் தின்றால் தூக்கம் தான் வரும்… ஆழ்ந்து தூங்கிய உடம்பு மதமதத்து ஆடும்… எல்லாச் சுகங்களும் தேடும்…

தன்னையறிதல் என்பது அங்கே செத்துப்போகும்… ஆழ்ந்த, அடர்ந்த அமைதி உள்ளுக்குள்ளே வரவே வராது... கலபரியந்தமும் குதித்துக் குதித்து, கத்திக் கத்தி, அலறி அலறி அவர்கள் வெறுமே செத்துப் போவார்களே தவிர, ஞானத்தின் வாசனை கூட மேலே படாது.

(இன்னும் வரும்............)

Sunday, November 20, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-5


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

இம்மாதிரியான பொருட்கள் எல்லாம் மக்களை அருகே ஈர்க்கும்... ஆனால், மிகப்பெரிய அவநம்பிக்கையை கொடுத்தவரைப் பற்றி ஏற்படுத்தும்.

இது மிகப்பெரிய கௌரவம் என்று செய்த அத்தனை பேரும் கேவலப்பட்டு இருக்கிறார்கள்...

தந்திரங்கள் செய்த அத்தனை பேரும் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்...

ஆனால் சத்தியமானவர்களை இந்த உலகம் எப்போதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது...

தலைமுறை, தலைமுறையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர் புகழ் போற்றிப் பாடுகிறது..
அவர் மலரடி பின் தொடர்கிறது.

கவர்ச்சிகரமான உடைகளை விட, தங்கத்தாலான உத்திராட்சங்களை விட, எண்ணெய் பூசிய தலைமுடியை விட “சத்தியம்” மிக கவர்ச்சிகரமானது...

இம்மாதிரியான யோகீஸ்வர்கள் எல்லா காலத்திலும் கொண்டாடப்படுகிறார்கள்..

ஒருவர் யாசகம் கேட்க போகும் போதே இல்லை என்று சொன்னாலும் மவுனமாக ஏற்பதற்கு தெரிந்து கொள்ள வேண்டும்... நீங்கள் வழிப்பறிக்கு போனால் இல்லை என்று சொல்வதற்கு கோபப்படலாம்... ஆத்திரப்படலாம்... வெட்டி கொன்று விடுவேன் என்று கத்தியை காட்டலாம்... ஆனால், பிச்சை எடுப்பதற்காக போய் விட்டு கொடுக்கவில்லை என்று மறுத்து விட்டார்கள் என்று யாரும் அழுவார்களா?

மறுப்புக்கு தயாராகத் தான் யாசகம் கேட்க போயிருக்க வேண்டும்... அப்படி போவது தான் யாசகம்...

பணிவு இல்லாத இட்த்தில் பக்தி வராது, வெறும் அலட்டல் தான் வரும்... போய் நின்றால் உங்களுக்கு ராஜமரியாதை தரவேண்டும் என்ற் அகம்பாவம் தான் வரும்...

பணிவு இருப்பின், அவமானம் ஒரு முக்கியமான விஷயமாக இருக்காது.

இல்லை, இல்லை என்று ஒற்றை வார்த்தையில் மறுத்தவனை நீங்கள் மனதார வாழ்த்தி விட்டு வந்திருப்பீர்கள், இப்படி வெம்பி அழ மாட்டீர்கள்...

பெண்களுக்கு நான்கு வித புருஷர்களால் (ஆண்களால்) துக்கம் உண்டு என்று சொல்லப்பட்டு இருக்கிறது... தகப்பனாலும், சகோதரனாலும், கணவனாலும், பிள்ளையாலும் துக்கம் உண்டு... இவர்களில் எவரேனும் ஒருவரால் பாதிக்கப்படாத பெண்களே இருப்பதில்லை...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”கல்லூரி பூக்கள்” நாவலின் வரிகள் :

ஒரு ஆண், ஒரு பெண்ணை விரும்புவது இயல்பு… இயற்கை… ஆனால், ஒரே ஒரு பெண்ணை மட்டுமே விரும்ப வேண்டும்… ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டுமே வாழ வேண்டும் என்பதே ஒழுக்கம்…

சினிமாவில் அடிப்படையான விஷயமே ஆளுக்குத் தகுந்த சர்க்கரையான பேச்சு தான்… சினிமா என்பது பேசும் படம்… அங்குள்ளவர்கள் பேசத் தெரிந்தவர்கள்… பேசத் தெரிந்தவர்களே அங்கு ஜெயிக்க முடியும்.

வாழ்க்கையில் பாதிக்கு கடவுளை நம்பணும்… மீதிக்கு மனிதர்களை நம்பணும்… வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம் என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை… இருக்க வேண்டிய அவசியமும் இல்லை… ஆனால், சிலருக்கு இருக்கிறது… இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது…

நட்பை யார் வேண்டுமானாலும், யாருக்கும் கொடுக்கலாம்… நட்பு என்பது விரிவுபடுத்தப்பட்ட அன்பு… இந்த உலகம் தழுவிய காதல்… நட்பில் உறவுச் சங்கிலி இல்லை… அன்பு சுமை இல்லை… முடிந்த போது, முடிந்த வரையில், முடிந்தவர்க்கு உதவி செய்வதே நட்பு..

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல முகங்கள்… ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதம்… ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு முகம் வெளியே வரும்..

வாழ்க்கையில் அதிகம் நடிப்பவர்க்கு தன் உண்மையான முகம் எதுவென்றே தெரியாமல் போகும்… தன் உண்மையான முகத்தை தெரிந்து கொள்கின்ற ஆவல் இல்லாமெலே போகும்….

காசு என்பது பொருட்கள், பொருட்கள் என்றால் சந்தோஷம்….

காசு என்பது அதிகாரம்…. அதிகாரம் என்றால் சந்தோஷம்..........

காசு என்பது பாதுகாப்பு… பாதுகாப்பு என்றால் சந்தோஷம்........


(இன்னமும் வரும்.....)

Saturday, November 12, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-4


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

திறம்பட தவம் செய்ய வேண்டுமென்றால் நல்ல குருவின் ஆசிர்வாதம் வேண்டும்... குருவினுடைய அனுக்கிரகம் இல்லாமல் தவம் செய்தல் எளிதல்ல.,.. குருவின் அன்பு இருந்து விட்டால், செய்யும் தவம் முழுமையடையும்... பலிதமாகும்...

குழந்தை என்றால் குறும்பு செய்யத்தான் செய்யும்... குறும்பு செய்கிற குழந்தையை நம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்... நம் கண் பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும்... என்னிடம் குறும்பு செய், என்னிடம் குறும்பு செய் என்று உற்சாகப்படுத்த வேண்டும்... குழந்தை கொலு பொம்மையை போல வைத்த இடத்திலேயே இருந்தால் நன்றாக இருக்குமா? இது வியாதி அல்லவா? குழந்தை என்பது ஓடி ஆடி குறும்புகள் செய்தால் தான் குழந்தை... அந்தக் குழந்தை தான் பலமுள்ள, வளமுள்ள, வாலிபனாக வளர முடியும்... குறும்பு செய்யக்கூடாது என்று ஒரு குழந்தையை கட்டிப்போடுவதோ, அடிக்க கை ஓங்குவதோ, திட்டுவதோ மிகப் பெரிய முட்டாள்தனம்... பொறுப்பில்லாத தாயார் என்று அர்த்தம்... உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், உனது குழந்தையை பற்றிய அக்கறை இல்லை என்று அர்த்தம்...

ஒரே இடத்தில் நின்றபடி நீண்டு நிமிர்ந்து மரமாக வளர்வது தவம் எனில், இப்படி ஆடுவதும் ஒருவகை தவம்கடவுள் அருகினில் இருக்கையில் எது செய்தாலும், அது தவமாகிறதுகடவுளுக்காக என்று எது செய்தாலும் அது தவமாகிறது

கடவுள் என்பவரின் அருகாமை, ஒரு குடும்பத்தை சந்தோஷமாக்கும்... மென்மேலும் பலமாக வளர்க்கும்....

பாம்பை கயிறென்று நினைத்தால் கயிறு... கயிறை பாம்பென்று நினைத்தால் பாம்பு... பார்க்கின்ற பார்வையில் தான் பார்க்கப்படும் பொருளின் குணம் இருக்கிறது...

இது வெறும் கயிறுதான் என்று பாம்பை தொட்டுவிட்டு, பாம்பு சீறிய பிறகு தான், அது கயிறு இல்லை, பாம்பு என்று அலறி தூக்கி வீசி விடத் தோன்றும்... எனவே, திடமாக பார்ப்பதற்கு பார்வை இல்லாதவர்கள், தெளிவாக பார்ப்பதற்கு பார்வை இல்லாதவர்கள், விருப்பு, வெறுப்பு இல்லாமல் பார்ப்பதற்கு திறன் இல்லாதவர்கள் அனுபவித்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்...

கர்வம் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும்... எப்போது வேண்டுமானாலும் வரும்... வீரமானவர்கள் எல்லாம் கர்வத்தினால் நிலைகுலைந்து போயிருக்கிற கதைகள் புராணங்களில் அதிகம் உண்டு...

உண்மையான மனது வருவதற்கு கடவுள் அனுக்கிரகம் தேவை... கல்வி உண்மையான மனதை கொடுக்க வேண்டும்... அதுதான் நல்ல கல்வி...

கல்வி கர்வத்தை கொடுக்குமெனில், தான் என்ற அகம்பாவத்தை கொடுக்கும் எனில், அது தவறான கல்வி...

நான் யார் தெரியுமா என்று எவரும் ஆடையை அவிழ்த்து காட்டுவதில்லை... அப்படி காட்டுவது அநாகரீகம், அசிங்கம்...

அப்படி தான் சொல்லி தரப்பட்டிருக்கிறது....

நான் என்கிற போது, அந்த நான் ஆடைகளோடும், அணிகலன்களோடும், படிய வாரிய கேசத்தோடும், புத்திசாலித் தனத்தோடும், செல்வத்தோடும், இன்னும் பிற விஷயங்களோடும் ஒட்டிக் கொண்ட்து தான் அந்த நான்..

ஆனால் படிப்பும் நீ அல்ல... பணமும் நீ அல்ல... இந்த உடம்பும் நீ அல்ல...

நான் என்று சொல்கிற அந்த விஷயம்.... இந்த உடம்பாக இல்லை... உடம்பாகவே அது இல்லை என்றால், உடம்பின் மீது உடுத்திக் கொண்ட ஆடையாக அது எப்படி இருக்கும்...

ஆடையையே உதற முடியவில்லை என்றால், உடம்பு என்னுடையது இல்லை என்று எப்படி உதற முடியும்?

ஆன்மா என்பதை பற்றி இருக்கிற உடம்பு ஒரு வேஷம் என்றால், உடம்புக்கு மேல் போட்டுக் கொண்டிருக்கிற உடை வேஷம் தானே... உன் பணம் வேஷம் தானே.... உன் படிப்பு வேஷம் தானே... உன் அதிகாரம் வேஷம் தானே... உன் வாள்பலம் வேஷம் தானே....

சிகையும், தலைப்பாகையும், மணியும், மாலையும், சடங்குகளும், ஆச்சாரமும், அனுஷ்டானமும் வேஷம் தானே...

மதச் சின்னங்கள் வேஷம் தானே....இத்தனை வேஷங்களை வைத்துக் கொண்டு நிர்குணமான கடவுளை எப்படி அறிந்து கொள்ள முடியும்? கடவுள் தேடுதலும் இங்கு வேஷமாக போய்விடும்... பொய்மை தான் முதலில் நிற்கும்...

பொய்மையுடைய ஒருவன் உண்மையை அறிந்து கொள்வது எப்படி? தன்னை அறிந்து கொள்வது எங்கனம்? உடை உடுத்துதலில், வாசனை திரவியத்தில், கவனமாக பேசுதலில், விதம் விதமாக ஆபரணங்கள் அணிவதில், உயர்ந்த கட்டிடங்களில் வாழ்வதில், என்று இவைகளை மதிக்க துவங்கிவிட்டால், உள்ளுக்குள்ளே இருப்பது என்ன என்று தெரியாது போய்விடும்...

இறக்கும் போது, உள்ளூக்குள்ளே இருப்பதை பற்றி அறிய முற்படும் போது வெறும் இருள் தான் சூழும்...

இருக்கும் போது சிறிய வெளிச்சத்தை கூட தேடாதவர், இறந்த பின்னர் ஞானியாகி விடுவாரா? காரிருளில் தான் மூழ்கி போவார்.....

தனக்குள்ளே மிளிருகின்ற அந்த நீர் ஓட்ட்த்தை, உயிர் சக்தியை, ஆன்ம பிரதிபலிப்பை, ஜீவனை அறியமுடியாதார், அறிய முயற்சி செய்யாதார் வாழ்ந்து எந்த பயனும் இல்லை...

மதுவை அருந்தியபடி, வேதம் சொல்ல முடியுமா... அப்படி வேதம் சொன்னால் யாரேனும் கேட்க முடியுமா?

இத்தனை உடைமைகளின் மீது ஆசை வைத்துக் கொண்டு எவர் ஒருவர் கடவுளைப் பற்றி விவாதிக்க முடியும், பேச முடியும்? அறைகூட முடியும் அல்லது மற்றவர்க்கு அறிவுறுத்த முடியும்?

உலக வாழ்க்கையின் போக்கியங்கள் எல்லாம் மயக்கமானவை…. மாயையானவை...

அந்த போகத்தில் ஒன்று ஆடை, மற்றவை அணிகலன்... இன்னொன்று, அதிகாரம்... இன்னொன்று உடல் வலிமை.. அவர், இவர் என்று பிரித்துக் கொள்கின்ற அகம்பாவத் தன்மை... எஜமான், அடிமை என்கிற இறுமாப்பு.

ஆடையையே களைய முடியாதவர், இவற்றை எல்லாம் ஒரு போதும் களைய முடியாது... இவைகளை களையாதவர் எவருக்கும் இறை தரிசனம் வெகு நிச்சயம் கிடைக்காது...

இந்த பரத கண்டத்தில் பல ஞானிகள் உடையைப் பற்றி கவலைப்படாமல், தலைமுடியை பற்றி கவலைப்படாமல், வீடு வாசல் பற்றி கவலைப்படாமல், கோமணதாரிகளாக, அழுக்குடையவர்களாக, நிர்வாணிகளாக, எந்த அலங்காரகும் அற்றவர்களாக தன்னை மறந்து திரிந்திருக்கிறார்கள்...

தன்னை அலங்கரிப்பதில் ஆசை கொண்ட எவரும் கடவுளை தொட முடியாது..

தன்னை அலங்கரித்து, தன் சிகை, தன் சிரிப்பு, தன் உடை, தன் பட்டு, தன் தங்கம் என்று மினிக்கிய அத்தனை பேரும் சோகப்பட்டு இருக்கிறார்கள்... அவமானப்பட்டு இருக்கிறார்கள்...

(இன்னமும் வரும்........)