Friday, October 21, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-2


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

இயற்கை சக்தி அல்லது கடவுள் என்ற மகத்தான வலிமை பற்றிய அறிவு இல்லாதவர்கள்
, தங்களுடைய வளர்ச்சி, தங்களுடைய வலிமை, உலகத்தை ஆளக்கூடிய திறமை உடையது என்று நினைத்துக் கொள்கிறார்கள்

புஜ வலிமை என்பதும், புத்தி வலிமை என்பது, மன வலிமை என்பதும் உலகில் மிகச் சிறிய விஷயங்கள். மிக உயரமாக வளர்ந்த ஒரு மரம் போல இயற்கை கொடுத்த வரப்பிரசாதங்கள். அங்கே நிச்சயம் முயற்சியும், சட்ட திட்டங்களும், இடைவிடாத பயிற்சியும் இருந்திருக்கிறது என்பது உண்மையாயினும், இது உலகை ஆளக்கூடியது அல்ல

இந்த மனோசக்திகளும், உடல் சக்திகளும் எல்லைகள் உடையவைஒரு அளவுக்கு மேல் பயன் தராதவைலட்சக்கணக்கான மனிதருக்கு நடுவே உயரமாக கிளர்ந்து எழுந்து விட்டால், தான் உலகையே ஆளக்கூடியவன் என்ற எண்ணம் ஏற்படுவது பேதமை

மனிதர்களில் பெரும்பாலோர்க்கு அவ்வப்போது இப்படி பேதமை ஏற்படும்அவனை சுற்றியுள்ள மனிதர்களை ஜெயித்த்தால், தனக்கு அருகே இருக்கின்ற திறமையானவர்களை மீறி வெற்றி பெற்றதால், அவர்களுக்கு இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா விஷயங்களையுமே ஜெயித்து விட முடியும்வெற்றி பெற முடியும்காலடியில் கவிழ்த்து விட முடியும் என்கிற எண்ணம் தோன்றும்

தன்னைப் பற்றிய அளவு மதிப்பீடு தவறாக போய் எதிர்பக்கம் இருக்கின்றவருடைய அளவு மதிப்பீடு குறைவாகப் போய் அவர்கள் கொக்கரிக்கத் துவங்கி விடுவார்கள்

இந்த உலகம் அவ்வப்போது மனிதர்களில் இப்படிப்பட்ட கொக்கரிப்பாளர்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறதுசந்தித்துக் கொண்டு தான் இருக்கிறதுசகித்து கொண்டு தான் இருக்கிறது

கடவுள் என்கிற பயம் இருந்தால்தான் வாழ்க்கை சௌலப்பியமாக, சுகமாக இருக்கும்

கடவுள் என்று ஒன்று இல்லை, நானே இந்த உலகத்தின் உச்சி என்று யார் நினைத்தாலும் அழிவின் விளிம்பில் நிற்கிறான் என்று அர்த்தம்

கடவுள் என்பதை அறிய பணிவு வேண்டும்பணிவில்லாத போது தந்திரங்கள் தான் தலைதூக்கும்.

உலக மக்களுக்கு தெளிவு ஒரே நேரத்தில் வந்துவிடாது... தெளிவுள்ள குழு என்றும், தெளிவற்ற குழு என்றும் பாதி தெளிந்த குழு என்று பிரிந்து தான் இருக்கும்.

கடவுளை நோக்கி நடக்கும்போது, கடவுளை காப்பாற்றுவதற்காக நடந்தால், கடைத்தேற முடியுமா? இரண்டும் கெட்டானாகத்தான் நிற்க முடியும்... தன்னை காப்பாற்றிக் கொள்ள நடந்தால் ஒரு வேளை கடவுள் கையில் சிக்கியிருப்பார்...

கடவுள் மீது பக்தி உள்ளவர்களுக்கு இம்மாதிரியான பேதமைகள் ஏற்படுவது வழக்கம்... கடவுளை நாம் அலங்கரிக்கிறோம் என்பதாலேயே அலங்கரிப்பவர் கடவுளுக்கு மிக நெருக்கமானவராகவும், அவர் மீது மிக உரிமை உள்ளவராகவும் தன்னை நினைத்துக் கொள்கிறார்...இது பேதமையின் உச்சகட்டம்...

ஸ்வாமியை நாங்க தான் தொடலாம்... நீங்க தொடக்கூடாது என்று அறிவார்ந்த கூட்டம் ஒன்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு பேசும்... இப்படித்தான் பூஜை என்று ஏதோ ஒரு முறையை சொல்லும்...

எல்லா ஆஷாட அனுஷ்டானங்களும் அகந்தையை கொண்டு, அகந்தையாய் நடத்தப்படுகின்றன...

இறைவனை எங்கே காண்பது... அது இறைவனால் தீர்மானிக்கப்பட வேண்டும்...

தான், உடம்பு என்ற கர்வத்தில் திளைத்திருப்பவர்களுக்கு சிற்றின்பத்தில் தான் திளைத்திருக்க முடியும்... எவ்வளவு அழகான தோள்கள், எவ்வளவு உறுதியான தொடைகள், எவ்வளவு திடமான புஜம், எத்தனை அழகான கண்கள், எல்லா பெண்களும் மயங்குகிற மார்பு, அத்தனை பெண்களும் மயங்குகின்ற சிரிப்பு என்று தசை, நரம்பு, எலும்பு குவியல்களை உடம்பாக கொண்டு, தோல் போர்த்திய இந்த பொருட்களை தான் என்று நினைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்...

பெண்கள் மயங்கினார்கள் என்பது ஒரு நாடகம்... பெண்களை மயக்க முடியும் என்று நினைத்துக் கொள்வது இன்னொரு நாடகம்... ஒன்றை ஒன்று மிஞ்சிய நாடகம் தான் தொடர்ச்சியாக நடக்கிறது.

காமம் என்பது காதலின் வளர்ச்சியாக, பிள்ளை பெறுதலின் முயற்சியாக, பரஸ்பர அன்பு பரிமாறலுக்காக, குடும்பம் என்கிற அமைப்பின் அஸ்திவாரமாக, குலம் என்கிற விஷயத்தின் நடைபாதையாக, இருக்கவேண்டுமே தவிர, காமத்தை பற்றி அலட்டிக்கொள்வதற்கு வேறு எதுவும் இல்லை.

மனித இனம் அறுபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தால் தான் அது கவர்ச்சிகரமாக மனிதனுக்குள் படைக்கப்பட்டிருக்கிறது..

கல்பகோட காலங்கள் மனிதன் தொடர்ந்து பிறந்து, வளர்ந்து, உன்னதமான ஒரு நிலையை அடைய வேண்டும் என்ற கருணையின் காரணமாகத் தான் காமம், இனிப்பான, சுவையான, அனுபவித்தே தீர வேண்டிய அற்புதமாக, காவியமாக இருக்கிறது.

அழகிய பெண்கள் தான் முக்கியம் என்ற அலம்பலுக்குள் மனம் சிக்கிக்கொண்டால், இங்கே மனித இனத்தின் வளர்ச்சி பற்றிய மேன்மை இல்லை... இந்த சிந்தனைகள் இல்லாத ஒரு காரியத்தில் ஈடுபடுகிற போது அது மிக ஆபாசமாக இருக்கும்..

பாட்டும், கூத்தும் அற்புதம் தான்... ஆனால், அதை குடும்பத்தோடு அனுபவிக்கிறது உள்ளுக்குள்ளே மிகப்பெரிய ஆசுவாசத்தை, அன்பு தளும்பலை அது ஏற்படுத்துகிறது..

அங்கே பாட்டு உன்னதமான இருக்க வேண்டும் என்று அவசியம் கூட இல்லை... மிக சுமாரான பாட்டு கூட தேவகானமாக காதில் ஒலிக்கும்... குழந்தையின் மழலை கூட யாழ் போல, வீணை குழல் போல காதில் வந்து மோதும்.

பெற்ற பிள்ளைகளை மடியில் வைத்துக்கொண்டு, அதுகள் செய்யும் குறும்புகளை கணவன் பொறுத்துக்கொண்டு, புன்னகை செய்தால், மனைவி ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டால், அது கொடுக்கும் கிளர்ச்சி மிக அற்புதம்....

குடும்பம் என்பது தர்மத்தின் பாற்பட்ட வாழ்க்கை... தர்ம/மே மனிதனின் நாகரீகம்... அதர்மம் அநாகரீகம்....

(இன்னமும் வரும்..........)

2 comments:

கிரி said...

கோபி நல்லா தொகுத்து இருக்கீங்க.. பாலகுமாரன் அவர்கள் வாழ்க்கை அனுபவத்தையும் சிறப்பாக கூறி இருக்கிறார் அவருடைய ஒரு சில கதைகளில் ரொம்ப சிறப்பாக கதையோடு விளக்கி இருப்பார்.

R.Gopi said...

மிக்க நன்றி கிரி...

சமீபகாலமாக ஆன்மீகம் நிறைய எழுதுகிறார்...

ஆனாலும் எனக்கு படிக்க பிடித்து இருக்கிறது...

வெட்டியான எவ்வளவோ எழுத்துகளை மீண்டும் மீண்டும் படிக்கும் போது, நல்ல ஆன்மீக விஷயங்களை திரும்ப திரும்ப படிப்பதில் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை...