2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதி வரை வெளிவந்த படங்களில் "நாடோடிகள்" தவிர எந்த படமும் போணியாகாத நிலையில், கோலிவுட் டைரக்டர்கள் ஒன்று கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கிறார்கள்...
செலவுகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே தாக்குபிடிக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளை தெரிந்து கொள்வோம், வாருங்கள்.....
**************
பேசாம நாம பழைய வ்யாவாரத்துக்கே போயிடலாம்னே.... புண்ணாக்க நோண்டிட்டு, புளிய உருட்டிட்டு...... என்னவோ செய்யலாம்..... இங்க, நேத்து வந்த பயலுவ எல்லாம், நம்ம வந்தா மருவாத குடுக்கறதில்ல..... காலு மேல காலு போட்டு இருக்கானுவ.... என்று "பூமநாராயணன்" சீறினார்.....
இன்னிக்கி தான்யா சரியா சொன்னீரு.... என் படத்துல நடிக்கற ஹீரோ, ஹீரோயின் பண்ற அலப்பறை கூட தாங்கலேய்யா என்று "டிங்கர் பிச்சான்" பொருமினார்.... அதுலயும், அந்த விஜயகாந்து படம் "எங்கள் ஆசான்" வந்தது பாருங்க.... அய்யோ...அய்யோ.. ரெண்டு, மூணு ஷோ தான் ஓடுச்சு.... அதுக்கே.. தியேட்டர் ஆப்பரேட்டருங்க 10/20 பேரு கீழ்ப்பாக்கத்துல அட்மிட் ஆயிட்டானுவக...
கரெக்டுங்க.... என் படத்துல பாருங்க.... ஒப்பனிங் சீன்ல ஹீரோ ரயில்ல வந்து எறங்கரார்னு அந்த "பிஜய்" கிட்ட கதை சொல்றேன்.... ஹெலிகாப்டர்ல வந்து எறங்கற மாதிரி சீன் வைய்யுன்னு பெரிய சீன் போடறாரு... "கொட்டாம்பட்டி"க்கு வர்ற ஹீரோக்கு எதுக்குங்க ஹெலிகாப்டர்..... என்று "பீரரசு" நறநறக்கிறார்.
பேசுறது எதுவா இருந்தாலும் சீக்கிரம் பேசிட்டு என்னை மட்டுமாவது அனுப்புங்க... இன்னிக்கி ஏ.வி.எம்.ல "தந்திரன்' படத்தோட கிளைமாக்ஸ் ஷூட்டிங் இருக்கு என்று அவசரப்படுத்துகிறார் டைரக்டர் "பங்கர்"...இவனுங்களும், இவனுங்க இம்சையும் என்றபடி...
நான் இங்க எதுக்கு வந்தேன்னே தெரியல என்றபடி மோட்டுவளையை பார்த்தபடி தாடையை சொரிந்தார் "பவுதம் பேனன்". இந்த மாதிரி ஷாட் வச்சா நல்லா இருக்குமா இல்ல "பம்பு"வும் "பிரிஷா"வும் வானத்து மேல இருந்து பறந்து வர்ற மாதிரி ஒரு ஷாட் வச்சு அசத்திடுவோமா என்று தனக்கு தானே பேசி சிரித்துக்கொண்டிருந்தார்...
"ஏழாம் வடை" படத்தோட ஷூட்டிங் நிறுத்திட்டு இந்த மீட்டிங் வந்து இருக்கேன்.. அங்க எல்லாரும் எனக்காக வெயிட்டிங்... சொல்றத எதுன்னாலும் சீக்கிரம் சொல்லுங்க என்று கர்ஜித்தார் "கந்தர் கி".
அப்போது "தமிழ் கரடி" ஆவேசமாக சவுண்ட் விட்டுக்கொண்டு உள்ளே வர அந்த ஏரியாவே டெர்ரராகிறது....
யார் கிட்ட, என்கிட்டயேவா..... நான் தமிழன்டா.....தமிழன்..... யூத்து... தெரியும்ல... இன்னும் நான் யூத்து என்று விரலை சொடுக்கியபடி எனக்கு தமிழ் மட்டும் இல்ல.... இங்கிலீஷும் தெரியும்.....
வர்றியா..... ஒரு மேடை போட்டு ABCD சொல்லுவோம்.... யாரு மொதல்ல சொல்லி முடிக்கறாங்கன்னு பாப்போமா..... "பனை மரத்துல வவ்வாலா இந்த கரடி கிட்ட சவாலா"!!! இத பத்து தடவை மவுண்ட் ரோடு நடுவுல நின்னு கத்தி சொல்லுவியா? நான் சொல்லுவேன் என்றெல்லாம் சவுண்ட் விடுவதை பார்த்து அனைவரும் மூச்சு விட மறந்தனர்....
ஐயோ.....இன்னிக்கி செத்தோம் என்று எல்லாரும் கோரசாக மனதிற்குள் கூவினர்..... கரடி எங்கேயோ வெளியூர்ல ஷூட்டிங் போயிடுச்சுன்னு சொன்னதாலதான், இன்னிக்கி இந்த மீட்டிங் வச்சோம்.... ஆனா, கரடி எப்படியோ தப்பிச்சு இங்க வந்துடுச்சே, இன்னிக்கி நம்ம எல்லாரோட கதையும் சங்குதான், அபீட்டுதான் என்று நினைத்தனர்...
என்னையா நடக்குது இந்த நாட்டுல..... ஒரு தமிழனுக்கு உள்ளே வர அனுமதி இல்லையா..... ...... என் அடுத்த படம் வரட்டும்.... ஆல் ஓவர் தி வேல்ட் ஒரே ஒரு ஹீரோதான்.... அது நான்தான்....
கோலிவுட், மாலிவுட், பாலிவுட், ஹாலிவுட், பிளைவுட்னு எல்லா வுட்டும் என்கிட்டே வந்து கால்ஷீட் கேட்டு நிக்கும்..... என்றெல்லாம் பிதற்றுவதை பார்த்து "பீரரசு", டிங்கர் பிச்சான்", பூமநாராயணன் எல்லாம் டெர்ரர் ஆகிறார்கள்...
சற்றே தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு, தான் ஏற்கனவே எழுதி வைத்த தீர்மானங்களை டைரக்டர்கள் சங்க தலைவர் "பூமநாராயணன்" வாசித்தார்....
***********************
இனிமேல் நடிகர், நடிகைகளுக்கு கேரவன் வண்டி கிடையாது..... டெண்ட் கொட்டகைதான்.
விதவிதமான ஜூஸ் கிடையாது..... வெறும் தண்ணீர்தான்.... வேண்டுமானால் சிறிது ஐஸ் மட்டும் போட்டு..
படத்துல மொத்தம் 5 டிரஸ்தான் .....
மத்தியானம் சாப்பாடு வெறும் கம்பங்கூழும், பச்சை மிளகாயும்தான்.... வெங்காயம் வேணும்னா, அவிய்ங்கவிய்ங்க வீட்டுல இருந்துதான் எடுத்து வரணும்...
லன்ச் டயத்துல தூங்கறதுக்கு ஆளுக்கு ஒரு பாய் மட்டுமே தரப்படும். போர்வை வேண்டுமென்றால் அவரவர்கள் வீட்டிலிருந்தே எடுத்து வர வேண்டும். அது அவர்கள் இஷ்டம். இதில் நிர்வாகம் தலையிடாது.
வீட்டிலிருந்து ஷூட்டிங் நடக்கற இடத்திற்கு வருவதற்கு ஆளுக்கு ஒரு சைக்கிள் மட்டுமே தரப்படும்.....
தமிழ் படங்களின் பெயர் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.... இது ரொம்ப முக்கியம்....
நடிப்பவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்படும்.
இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படாதவர்கள், தானே சொந்தமாக படம் தயாரித்து நடிக்கட்டும் என்று இந்த சங்கத்தின் சார்பாக கூறிக்கொள்கிறேன்.....என்று அறிக்கையை வாசித்து முடித்தார்.....
இதை கேட்ட "பீரரசு" "கரடி" போன்ற ஹீரோ டைரக்டர்கள் கொதித்து எழுந்தனர்......
நீங்கள் போடும் சட்டம் எல்லாம், ஹீரோவாக மட்டும் நடிக்கும் நடிகர்களுக்குத்தான் பொருந்தும்...... எங்களை போன்ற படைப்பாளிகளுக்கு பொருந்தாது என்று ஜெர்க்கினர்....
படைப்பாளி என்ற வார்த்தையை கேட்டதும் நன்றாக தூங்கி கொண்டிருந்த "டிங்கர் பிச்சான்"...சட்டென்று எழுந்து கரடி, பீரரசு, கிந்தர் எல்லாம் படைப்பாளிகள் இல்லை.... அழிப்பாளிகள்.... இந்த படவுலகில் படைப்பாளி என்றால் அது இந்த "டிங்கர் பிச்சான்" மட்டும்தான் என்று ஓவர் அலப்பறை விடுகிறார்....
இதை கேட்ட "பீரரசு" மற்றும் "கரடி" ஆகியோர் சங்கமாவது.... சுங்கமாவது.... கலைங்கடா எல்லாத்தையும் என்றபடி தன் தலையை கலைத்து, சட்டையை கிழித்துக்கொண்டு "டிங்கர் பிச்சான்" நோக்கி ஆவேசமாக பாய்ந்தனர்....
நிலைமை மோசமாவதை கண்ட "பூமநாராயணன்" சங்கத்தின் பின் வாசல் வழியாக பாய்ந்து தாவுகிறார்.... "கரடி" மற்றும் "பீரரசு" அவரை அடிக்க கையில் அரை செங்கல் எடுத்து துரத்துகின்றனர்......
மொத்தத்தில் அந்த ஏரியாவே "கலீஜ்" ஆகிறது.... ஆமாம்... இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா?